UPDATED : மே 14, 2026 03:29 PM
ADDED : மே 14, 2026 12:20 PM
பாலக்காடு: பாலக்காடு அருகே, லாரி ஓட்டுநர்கள் ஓய்வறையில் இருந்து மொபைல்போனை திருடிய வழக்கில், கோவை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பாலக்காடு மாவட்டம், வாளையார் பகுதியில் உள்ள ஹெச்.பி., காஸ் லாரி ஓட்டுநர்கள் ஓய்வறையில், புகார்தாரர் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது கட்டிலுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த ரூ.23 ஆயிரம் மதிப்புள்ள மொபைல்போன் திருடு போனது. புகாரின் அடிப்படையில், வாளையார் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், கோவை உக்கடம் கரும்புக்கடை முத்து காலனியை சேர்ந்த அப்பாஸ், 36, மொபைல்போனை திருடியது தெரிந்தது; அவரை கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'கைது செய்யப்பட்ட அப்பாஸ் மீது, தமிழகத்தின் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் 22க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிறையிலிருந்து வெளியே வந்த சில நாட்களிலேயே மீண்டும் கைவரிசை காட்டியுள்ளது விசாரணையில் தெரியவந்தது' என்றனர்.
