/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மது இல்லாத கிராமம்; இளைஞர்கள் உறுதிமொழி
/
மது இல்லாத கிராமம்; இளைஞர்கள் உறுதிமொழி
ADDED : ஏப் 01, 2025 09:51 PM

கோத்தகிரி; கோத்தகிரி அளக்கரை இளைஞர்கள், ஊர் மக்கள் மது அருந்துவதை தவிர்த்து உறுதி மொழி எடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில், 350க்கும் மேற்பட்ட கிராமங்களில் படுக சமுதாய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 'திருவிழா, திருமணம், சீர், பிறப்பு மற்றும் இறப்பு,' என, சுப நிகழ்ச்சி மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் பலர் மது அருந்துவது வழக்கம்.
இதனால், பொருளாதாரம் சீரழிவதுடன், குடும்பங்களில் பிரச்னைகள் அதிகரித்து வருகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு, படுக சமுதாய அமைப்புகள் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.
அதன்படி, 'பல கிராமங்களில் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்,' என, தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதை தொடர்ந்து, 'தும்மனட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, 15க்கும் மேற்பட்ட கிராமங்களில், எந்த நிகழ்ச்சியாக இருப்பினும், மது அருந்துவது இல்லை,' என, முடிவெடுத்து அந்த நடைமுறை இன்றளவும் நீடித்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, கோத்தகிரி அருகே உள்ள அளக்கரை கிராமத்திலும், மதுவுக்கு எதிரான கோஷம் எழுந்துள்ளது. கிராம இளைஞர்கள் உட்பட, ஊர் மக்கள் ஒருங்கிணைந்து, மாரியம்மன் திருவிழாவை முன்னெடுத்து, 'இனிமேல், கிராமத்தில் நடைபெறும் சுப நிகழ்ச்சி மற்றும் துக்க நிகழ்ச்சி என எந்த நிகழ்ச்சி நடந்தாலும், மது அருந்தக் கூடாது,' என, உறுதி மொழி எடுத்து, கிராம எல்லையில் தகவல் பலகை வைத்துள்ளனர். கிராம மக்களின் இந்த முடிவு, பல தரப்பு மக்கள் மத்தியிலும் வரவேற்பு பெற்றுள்ளது.

