/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
பெரம்பலுார் அருகே ஸ்கேன் செய்து பாலினம் கூறும் கும்பல் மீது வழக்கு
/
பெரம்பலுார் அருகே ஸ்கேன் செய்து பாலினம் கூறும் கும்பல் மீது வழக்கு
பெரம்பலுார் அருகே ஸ்கேன் செய்து பாலினம் கூறும் கும்பல் மீது வழக்கு
பெரம்பலுார் அருகே ஸ்கேன் செய்து பாலினம் கூறும் கும்பல் மீது வழக்கு
ADDED : ஜூலை 26, 2024 10:16 PM
பெரம்பலுார்:தர்மபுரி மாவட்டத்தில், கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை, ஒரு கும்பல் கண்டறிந்து சொல்லி வருவதாகவும், அக்கும்பல், 'மொபைல் டீம்' போல செயல்படுவதாகவும் அந்த மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சாந்திக்கு புகார்கள் வந்தன.
உஷார் அடைந்த தர்மபுரி மாவட்ட நலப்பணிகள் துறை அதிகாரிகள், இந்த கும்பலை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். இந்நிலையில், அந்த கும்பல் காரில் கர்ப்பிணி பெண்களை அழைத்து சென்றுக் கொண்டிருப்பதாக நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, தர்மபுரி மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சாந்தி தலைமையிலான மருத்துவத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட காரை பின்தொடர்ந்தனர்.
பெரம்பலுார் மாவட்டம், செங்குணம் கிராமத்தில் தேவேந்திரன் என்பவரது கட்டடத்தில் இயங்கும் எம்.ஜி., மெடிக்கல் மாடியில் கர்ப்பிணி பெண்களை அழைத்துச் சென்ற அந்த கும்பல், அங்கு கையடக்க ஸ்கேன் மூலம் கருவில் இருக்கும் பாலினத்தை கண்டறியும் பரிசோதனையில் ஈடுபட்டது.
அப்போது, அங்கு வந்த தர்மபுரி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சாந்தி தலைமையிலான அதிகாரிகள் பரிசோதனை நடைபெற்ற மேல்மாடியை சுற்றிவளைத்து, பரிசோதனை செய்தவரையும் நான்கு கர்ப்பிணி பெண்களையும் பிடித்து விசாரித்தனர்.
அதில், கடலுார் மாவட்டம், கட்சிமேளூரைச் சேர்ந்த முருகன், 55, என்பவர் பரிசோதனைக்கு 16,000 ரூபாய் பெற்றுக் கொண்டு கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து சொல்வதும், அவர் எம்.ஏ., படித்துவிட்டு சட்டவிரோத செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் கர்ப்பிணி பெண்களை விசாரித்ததில், அவர்கள் நான்கு பேருக்கும் தலா இரு பெண் குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து, பெரம்பலுார் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் மாரிமுத்து புகார் கொடுத்தார். புகாரின்படி, மருவத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து, கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து சொன்ன முருகனை கைது செய்தனர். தப்பியோடிய மூன்று ஏஜென்ட்களையும் தேடி வருகின்றனர்.