/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
மகளை கொன்ற மருமகனை கத்தியால் குத்திய மாமியார்
/
மகளை கொன்ற மருமகனை கத்தியால் குத்திய மாமியார்
ADDED : ஜன 26, 2024 01:17 AM

பெரம்பலுார்:அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே, மங்களம் கிராமத்தைச் சேர்ந்த சரோஜா, 53, என்பவரது மகள் பிரியா, 20. வடுகர்பாளையத்தை சேர்ந்த தமிழரசன், 27, என்பவருக்கு பிரியாவை, 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொடுத்தார்.
திருமணமான மூன்று மாதங்களில், சாதாரண தகராறில், மனைவி பிரியாவை கணவர் தமிழரசன் அடித்துக் கொலை செய்தார். ஆண்டிமடம் போலீசார், தமிழரசனை கைது செய்தனர்.
அடுத்த சில மாதங்களில், தமிழரசன் ஜாமினில் வெளியே வந்தார். பிரியா கொலை வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், மகளை கொலை செய்த தமிழரசனை பழிக்கு பழி வாங்கக் காத்திருந்த தாய் சரோஜா, கடந்த 23ம் தேதி இரவு, வீட்டின் வெளியே துாங்கிக் கொண்டிருந்த தமிழரசனை கத்தியால் சரமாரியாக குத்தினார். தடுக்க வந்த தமிழரசன் தாய் விமலாவுக்கு கத்தி குத்து விழுந்தது.
முன்னதாக, தமிழரசன் வீட்டுக்கு சென்ற சரோஜா, அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக, மொட்டை அடித்திருந்தார்.
வீட்டின் வெளியே படுத்திருந்த நபர், மருமகன் தமிழரசன் தானா என்ற சந்தேகத்தில், 'உங்கள் பெயர் என்ன?' என கேட்டுள்ளார்.
அவர், தமிழரசன் என்றதும், கத்தியால் சரமாரியாக குத்தினார். பலத்த காயமடைந்த தமிழரசன் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். காயமடைந்த விமலா, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
ஆண்டிமடம் போலீசார் வழக்கு பதிந்து, மகளை கொலை செய்த மருமகனை கத்தியால் குத்திய மாமியார் சரோஜாவை, கைது செய்து விசாரிக்கின்றனர்.

