/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
ஜெகபர் அலியின் உடல் மறுபிரேத பரிசோதனை
/
ஜெகபர் அலியின் உடல் மறுபிரேத பரிசோதனை
ADDED : பிப் 01, 2025 02:01 AM

திருமயம்:உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சமூக ஆர்வலர் ஜெகபர் அலி உடல் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆய்வு நடந்தது.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி, கல்க்குவாரி உரிமையாளர்களால் ஜன., 17ம் தேதி லாரி ஏற்றிக் கொல்லப்பட்டார். கொலை தொடர்பாக ஐந்து பேரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
ஜெகபர் அலி மனைவி மரியம், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், ஜெகபர் அலியின் உடல் பிரேத பரிசோதனை முறையாக நடைபெற்றதா என சந்தேகம் இருப்பதாகவும், மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் மனு செய்தார். நேற்று முன்தினம் நீதிபதி நிர்மல்குமார் அமர்வு, ஜெகபர் அலி உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில், ஜெகபர் அலி புதைக்கப்பட்ட வெங்களூர் கிராம இஸ்லாமியர்கள் கபர்ஸ்தானில் திருமயம் தாசில்தார் ராமசாமி, சி.பி.சி.ஐ.டி., விசாரணை அதிகாரி புவனேஸ்வரி முன்னிலையில், புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவக் குழுவினர் நேற்று மதியம், 2:00 மணி அளவில் உடலை தோண்டி ஆய்வு செய்தனர்.
இரண்டு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற மறுபிரேத பரிசோதனை ஆய்வு எக்ஸ்-ரே படங்களை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காக அதிகாரிகள் பத்திரமாக எடுத்துச் சென்றனர்.