/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
நள்ளிரவு வரை டிஃபன் கடை அனுமதி
/
நள்ளிரவு வரை டிஃபன் கடை அனுமதி
ADDED : ஆக 03, 2011 12:37 AM
புதுக்கோட்டை: 'புதுக்கோட்டை நகரில் இரவுநேர டிஃபன் கடைகளை நள்ளிரவு ஒருமணி வரை நடத்த அனுமதி வழங்க வேண்டும்' என மாவட்ட போலீஸ்துறையை வர்த்தகக்கழகம் வலியுறுத்தியுள்ளது.புதுக்கோட்டையில் மாவட்ட வர்த்தகக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. தலைவர் சின்னப்பா தலைமை வகித்தார். கௌரவத் தலைவர் சேவியர் வரவேற்றார். செயலாளர் சார்லஸ்ராஜா அறிக்கை படித்தார். எஸ்.பி., முத்துசாமி, வர்த்தகக்கழக நிர்வாகிகள் ஷாகுல்ஹமீது, தனபால் செட்டியார், கைலாசநாதன், பழனியப்பன், கருப்பையா, முகம்மது பரூக் உட்பட வர்த்தகர்கள் பலர் பங்கேற்றனர்.ஜவுளிகளுக்கு விதிக்கப்பட்ட வரி ரத்து செய்ததைப் போன்று இதர பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியையும் அரசு ரத்து செய்யவேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்துக்கு அனுமதிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிக்கு இடம் தேர்வு செய்து கட்டுமானப் பணிகளை உடனடியாக துவக்கவேண்டும்.புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.புதுக்கோட்டை நகரில் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலைப் பணிகளை உடனடியாக துவக்கவேண்டும்.
நகரில் நிலவிவரும் குடிநீர் பற்றாக்குறைக்கு நிரந்த தீர்வு காணவேண்டும்.புதுக்கோட்டை நகராட்சியுடன் புதுக்கோட்டை கிராமப் பஞ்சாயத்தை இணைத்துள்ள நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையை மாவட்ட வர்த்தகக் கழகம் ஆதரிக்கிறது.புதுக்கோட்டை நகரில் இரவுநேர டிபன் கடைகளுக்கு இரவு 11 மணிவரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பயணிகள் மற்றும் வியாபாரகளின் நலனை கருத்தில்கொண்டு இரவு ஒருமணிவரை நடத்த போலீஸார் அனுமதி வழங்கவேண்டும்.புதுக்கோட்டை நகரில் அனுமதிக்கப்பட்ட வழிதடத்தில் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் முன்வரவேண்டும் உட்பட கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.துணைச் செயலாளர் செந்தில் நன்றி கூறினார்.