/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
2 செ.மீ., மழையை தாங்காத பரமக்குடி நகராட்சி அவலம்
/
2 செ.மீ., மழையை தாங்காத பரமக்குடி நகராட்சி அவலம்
ADDED : ஆக 15, 2024 04:07 AM

பரமக்குடி : பரமக்குடி நகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் 2 செ.மீ., மழையை கூட தாங்காத நிலையில் ஒவ்வொரு முறையும் மணிக்கணக்கில் கழிவு நீருடன் மழை நீர் தேங்கும் அவல நிலை உள்ளது.
பரமக்குடி நகராட்சி 36 வார்டுகளில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு ஏராளமான கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் உள்ளது. மேலும் சுற்று வட்டார கிராம மக்கள் அனைவருக்கும் பரமக்குடி பிரதான புகலிடமாக உள்ளது.
நகராட்சி பகுதிகளில் சில ஆண்டாக ரோடு அமைக்கும் பணிகளில் மட்டுமே மும்முரம் காட்டுகின்றனர். தொடர்ந்து வாறுகால் மூலம் கழிவு நீர் கடந்து செல்லும் வகையில் கட்டமைப்பை மேம்படுத்தாமல் உள்ளனர்.
இதனால் சவுகதலி தெரு, காந்தி சிலை ரோடு, உழவர் சந்தை, சின்னக்கடை பகுதி என குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே மழை நீர் தேங்கும் நிலை இருந்தது. தற்போது மழை நின்றாலும் பல மணி நேரம் தெருக்களில் கழிவு நீருடன் மழை நீர் கலந்து தேங்கியுள்ளது.
இதனால் பள்ளி விடும் நேரங்கள் மற்றும் காலை, மாலை என போக்குவரத்து நெரிசல் நிறைந்த நேரங்களில் விபத்து அபாயம் அதிகரிக்கிறது. அப்போது ரோட்டில் உள்ள பள்ளங்கள் மற்றும் வாறுகால் நிலை குறித்து அறிய முடியாமல் மக்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
ரோட்டில் தேங்கும் மழை நீர் வீடுகள், கடைகளுக்குள் புகும் நிலை ஏற்படுகிறது. இதே போல் நகராட்சிக்கு உட்பட்ட விரிவு படுத்தப்பட்ட குடியிருப்புகளில் நாள் கணக்கில் தண்ணீர் தேங்குகிறது. 2 செ.மீ., மழையை கூட தாங்காத நிலையில் அதிக மழை பெய்யும் நாட்களில் மக்களுக்கு ஆபத்து ஏற்படும். எனவே நகராட்சி நிர்வாகம் இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும்.