/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கை மீனவர்கள் 7 பேர் ஜூன் 3 வரை சிறையிலடைப்பு
/
இலங்கை மீனவர்கள் 7 பேர் ஜூன் 3 வரை சிறையிலடைப்பு
ADDED : மே 21, 2024 09:40 AM

ராமநாதபுரம் : துாத்துக்குடி கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 7 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். நேற்று ராமநாதபுரம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களை ஜூன் 3 வரை சிறையில் அடைக்க நீதிபதி ராஜகுமார் உத்தரவிட்டார்.
துாத்துக்குடி கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படையினர் வைபவ் கப்பலில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது எல்லை தாண்டி இந்திய கடல் பகுதியில் கன்னியாகுமரியில் இருந்து 70 நாட்டிக்கல் தொலைவில் இலங்கை மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களின் படகை பறிமுதல் செய்து அதிலிருந்த 7 இலங்கை மீனவர்களை கைது செய்தனர்.
இவர்களை துாத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் கடலோர காவல் படையினர் ஒப்படைத்தனர். இவர்கள் மீது கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்கு பதிந்தனர்.
இலங்கை காலே மாவட்டம் அம்பலன்கோடா பகுதியை சேர்ந்த ராமுது இண்டிகா திலிப்குமார 42, போக்லே பியால் டி சில்வா 44, கழுத்தோடக நிரங்க லக்மால் 27, கபுகே கியாங்கே தாரக அமிலகுமார 40, சுசாந்தா 39, ராம்புத்ரா சமிந்தா புஷ்ப குமார 37, மாலியா வடு சுபாலி 57, ஆகிய ஏழு பேரையும் ராமநாதபுரம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் செய்தனர்.
இவர்களை ஜூன் 3 வரை சிறையில் அடைக்க நீதிபதி ராஜகுமார் உத்தரவிட்டார். ஏழு பேரும் சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

