/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது
/
ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது
ADDED : ஆக 27, 2024 11:50 PM

ராமேஸ்வரம் : நடுக்கடலில் மீன் பிடித்த ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் படகுடன் கைது செய்து அழைத்து சென்றனர். அவர்களை செப்., 5 வரை சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆக.26ல் ராமேஸ்வரத்தில் இருந்து 430 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் வழக்கம் போல் இந்திய-இலங்கை எல்லையில் மீன் பிடித்தனர். அங்கு இரண்டு கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டினர். இதனால் பீதியடைந்த மீனவர்கள் கடலில் வீசிய வலையை படகில் இழுத்து கொண்டு தப்பினர்.
இதில் மரியசியா என்பவரது படகில் இருந்த மீனவர்கள் வலையை இழுக்க தாமதமானதால் ஆத்திரமடைந்த இலங்கை வீரர்கள் இப்படகை மடக்கி பிடித்தனர். படகில் இருந்த மீனவர்கள் கிங்சன் 38, மெக்கான்ஸ் 34, ராஜ் 48, இன்னாசி ராஜா 48, சசிகுமார் 45, மாரியப்பன் 54, அந்தோணியார் அடிமை 64, முனியசாமி 23, ஆகியோரை கைது செய்து படகுடன் மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.
மீனவர்கள் மீது மீன்துறையினர் வழக்கு பதிந்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை செப்., 5 வரை வவுனியா சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.