ADDED : ஏப் 01, 2024 10:01 PM

கமுதி : கமுதி அருகே கோவிலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு பயணியர் நிழற்குடை சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவிலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அரியமங்கலம், வேப்பங்குளம், கோவிலாங்குளம் பட்டி, கரிசல் புலி, ஆரைக்குடி, எருமைகுளம், கொம்பூதி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 300க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர்.
பள்ளி முன்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தகர ஷீட்டுகளால் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. காலை, மாலை நேரங்களில் மாணவர்கள் நிழற்குடையில் காத்திருந்து பஸ்சில் சென்றனர். தற்போது பயணியர் நிழற்குடையின் இரும்பு கம்பிகள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
இதனால் மாணவர்கள் அச்சமடைகின்றனர். பள்ளி முன்பு சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள பயணியர் நிழற்குடையை அகற்றிவிட்டு புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

