/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கள்ளப்படகில் வந்த அகதி தலைமறைவு
/
கள்ளப்படகில் வந்த அகதி தலைமறைவு
ADDED : ஆக 22, 2024 02:57 AM
ராமேஸ்வரம்:இலங்கையில் இருந்து கள்ளப்படகில் மண்டபத்தில் வந்திறங்கிய இலங்கை வாலிபரை கைது செய்யாமல் போலீசார் அலைக்கழித்ததால் அவர் தலைமறைவானார்.
இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்த தேவராஜ் மகன் வாசன் 21. இவரது தாய் விஜயதர்ஷனி 48. இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு அகதியாக தமிழகம் வந்தனர். விஜயதர்ஷினி மண்டபம் முகாமிலும், வாசன் திருச்சி முகாமிலும் இருந்தனர்.
இந்நிலையில் 2023ல் வாசன் விமானத்தில் இலங்கை சென்றுள்ளார். தமிழகத்தில் இருந்த விஜயதர்ஷனி உடல்நிலை பாதிக்கப்பட்டார்.
தாயை பார்க்க இலங்கையில் இருந்து வாசன் கள்ளப்படகில் சில நாட்களுக்கு முன் மண்டபம் கடற்கரையில் வந்திறங்கினார்.
மண்டபம் முகாம் சென்று தாயை பார்த்துள்ளார். அவரிடம் முகாம் போலீசார் விசாரித்த போது திருச்சி முகாமை சேர்ந்தவர் எனக் கூறியுள்ளார். அங்கு செல்லுமாறு இங்கிருந்த போலீசார் கூறினர். திருச்சி முகாமில் போலீசார் இங்கு உனது பதிவு ரத்தாகிவிட்டது. மண்டபம் முகாமில் பதிவு செய்து கொள் எனக்கூறி மீண்டும் அனுப்பினர்.
மீண்டும் வந்த வாசனை அதிகாரிகள், போலீசார் கள்ளத்தனமாக படகில் வந்ததால் பதிவு செய்ய முடியாது எனக் கூறி விரட்டியுள்ளனர். தாமதம் ஆனதால் மரைன் போலீசில் சரணடையுமாறு கியூ பிரிவு போலீசார் கூறியுள்ளனர்.
அலைக்கழிக்கப்பட்ட வாசன் தற்போது தலைமறைவாகிவிட்டார். அவரை மண்டபம் போலீசார் தேடுகின்றனர்.