ADDED : ஆக 22, 2024 02:27 AM
திருவாடானை: மாணவர்களின் கலைத்திறனை வெளிபடுத்தும் வகையில் பள்ளிகளில் கலைத் திருவிழா இன்று (ஆக.22) துவங்குகிறது.
மாணவர்களின் கலைத்திறனை வெளிபடுத்தும் வகையில் அரசு பள்ளிகளில் கலைத்திருவிழா ஆண்டு தோறும் நடத்தபட்டு வருகிறது. இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:
ஆறு முதல் பிளஸ் 2 வரை கலைத்திருவிழா ஆண்டு தோறும் நடக்கும். இக்கல்வியாண்டு முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களும் பங்கேற்கும் வகையில் கலைத்திருவிழா நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாக மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகள் நடத்தப்படவுள்ளது. 'சங்கமிப்போம் சமத்துவம் படைப்போம்,' என்ற மையக் கருத்தின் அடிப்படையில் கலைத்திருவிழா நடைபெறும்.
கலைத்திருவிழா இன்று (ஆக.22) துவங்கி செப்.10 வரை பள்ளிகளில் நடைபெறும். அதன் பிறகு வட்டார அளவில் நடைபெறும் என்றனர்.