/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புதிய கட்டடப் பணியின் தரம் ஆய்வு செய்ய வலியுறுத்தல்
/
புதிய கட்டடப் பணியின் தரம் ஆய்வு செய்ய வலியுறுத்தல்
புதிய கட்டடப் பணியின் தரம் ஆய்வு செய்ய வலியுறுத்தல்
புதிய கட்டடப் பணியின் தரம் ஆய்வு செய்ய வலியுறுத்தல்
ADDED : ஜூன் 03, 2024 02:59 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டடப் பணிகளின் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
நுாறுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஆர்.எஸ்.மங்கலம் மையப்பகுதியாக திகழ்வதால் அங்குள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் பெரும்பாலான கட்டடங்கள் சேதமடைந்த நிலையில் இருந்ததால் தொண்டியைச் சேர்ந்த கலந்தர் ஆஷிக் என்ற வழக்கறிஞர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து நீதிபதி மருத்துவமனை கட்டடங்களின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தார். அதைத் தொடர்ந்து சேதம் அடைந்த பழைய கட்டடங்களை இடிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும் மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்டவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தமிழக அரசு 1 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்ட கடந்தாண்டு நிதி ஒதுக்கீடு செய்தது. மருத்துவமனை வளாகத்தில் இருந்த பழைய கட்டடங்கள் அகற்றப்பட்டு புதிய கட்டடங்கள் கட்டும் பணி தற்போது நடக்கின்றன.
இந்நிலையில் புதிய கட்டடத்தின் பேஸ் மட்டத்தில் கிராவல் மண், அல்லது வேறு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் நிரப்புவதற்கு பதில் அப்பகுதியில் தோண்டப்பட்ட களிமண் மூலம் நிரப்பப்பட்டுள்ளது என்ற புகார் எழுந்துள்ளது.
இதனால் எதிர் காலத்தில் கட்டடத்தின் உறுதித் தன்மை கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. எனவே, கட்டடப் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
தொண்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் கூறுகையில், மருத்துவமனைக்கு புதிய கட்டட அனுமதி பெற்றதுடன் தனது பணி முடியவில்லை. மேலும் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கும் அனுமதி பெற்றுள்ளேன்.
ஆர்.எஸ்.மங்கலத்தில் நடைபெறும் மருத்துவமனை கட்டடப் பணிகளின் தரம் குறித்து புகார் எழுந்துள்ளது.
கட்டடப்பணி தரமற்ற முறையில் நடப்பது உறுதியானால் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவேன் என்றார்.