/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கொலை முயற்சி வழக்கில் தந்தை, மகனுக்கு சிறை
/
கொலை முயற்சி வழக்கில் தந்தை, மகனுக்கு சிறை
ADDED : ஜூலை 05, 2024 02:06 AM
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் யாத்ரீகர்களுக்கு பூஜை செய்வதில் ஏற்பட்ட தகராறில் உடன் பிறந்த அண்ணன், அவரது மகனை தாக்கிய கொலை செய்ய முயன்ற வழக்கில் தம்பி, அவரது மகனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ராமேஸ்வரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் சதலிங்க சர்மா 76. இவரது தம்பி சானந்த கணேஷ் 73. இவர்களுக்குள் சொத்து பிரச்னை இருந்துஉள்ளது. இந்நிலையில் ராமேஸ்வரம் வரும் யாத்ரீகர்களுக்கு பூஜை செய்வது தொடர்பாக 2016 ஜூன் 8ல் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது சானந்த கணேஷ், அவரது மகன் மிருத்யுஞ்ஜெயன் 47, ஆகியோர் சதலிங்க சர்மா, அவரது மகன் குருசித்தசாமி ஆகியோரை தாக்கினர். காயமடைந்த குருசித்தசாமி புகாரில்ராமேஸ்வரம் போலீசார் விசாரித்து சானந்த கணேஷ், அவரது மகன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.
இவ்வழக்கு ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. சானந்த கணேஷூக்கு 2 ஆண்டுகள் சிறை, ரூ.2000 அபராதம், மிருத்யுஞ்ஜெயனுக்கு 7 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2000 அபராதம் விதித்து நீதிபதி மோகன்ராம் உத்தரவிட்டார்.