/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருப்புல்லாணி கோவிலில் ரூ.1 கோடி நகைகள் மாயமான வழக்கில் ஊழியர்களிடம் விசாரணை ஸ்தானிகர் ஆஜராக சம்மன்
/
திருப்புல்லாணி கோவிலில் ரூ.1 கோடி நகைகள் மாயமான வழக்கில் ஊழியர்களிடம் விசாரணை ஸ்தானிகர் ஆஜராக சம்மன்
திருப்புல்லாணி கோவிலில் ரூ.1 கோடி நகைகள் மாயமான வழக்கில் ஊழியர்களிடம் விசாரணை ஸ்தானிகர் ஆஜராக சம்மன்
திருப்புல்லாணி கோவிலில் ரூ.1 கோடி நகைகள் மாயமான வழக்கில் ஊழியர்களிடம் விசாரணை ஸ்தானிகர் ஆஜராக சம்மன்
ADDED : ஏப் 07, 2024 01:14 AM
ராமநாதபுரம்:ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமான ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோவிலில் பெருமாள், பத்மாசனி தாயாருக்கு அணிவிக்க தங்கம், வைரம், வைடூரியம், முத்து, பவளம் போன்ற நகைகள் உள்ளன.
முன் ஜாமின்
இவை கோவில் ஸ்தானிகர் சீனிவாசன் பொறுப்பில் இருந்தன. இதில், 1 கோடிரூபாய் மதிப்புள்ள, 30 தங்கம், 16 வெள்ளி நகைகள் மாயமானது திவான் பழனிவேல் பாண்டியன் நடத்திய ஆய்வில் தெரிந்தது. திவான் புகாரில் குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
இதற்கிடையே, ஸ்தானிகர் சீனிவாசன் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் முதன்மை நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி மனு செய்தார்.
இம்மனுவுக்கு திவான் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், விசாரணை ஏப்., 12க்கு தள்ளி வைக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
கோவில் நகைகள் குறித்து திவான் 2022 செப்டம்பரில் நோட்டீஸ் அனுப்பி ஆய்வு செய்ய அறிவுறுத்தி உள்ளார். ஸ்தானிகர் சீனிவாசன் இதுபோன்று நோட்டீஸ் அனுப்பிய போதெல்லாம், உடல் நலக்குறைவால் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளார்.
மூன்றாவது முறை
இப்படி இரு முறை நகைகளை ஆய்வு செய்ய வரவில்லை. தற்போது மூன்றாவது முறையாகவும் ஆய்வு செய்ய வராமல் மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளார். நேற்று முன்தினம் தான் சிவகங்கை அரசு மருத்துவமனையில் இருந்து அவர், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளார்.
கோவில் நகைகள் தவிர்த்து உண்டியலில் சேரும் நகைகளும் ஸ்தானிகர் சீனிவாசன் பொறுப்பில் இருந்துள்ளன. உண்டியலில் சேர்ந்த நகைகளை பெற்றுக் கொண்டதாகவும் சீனிவாசன் கையெழுத்திட்டுள்ளார்.
தற்போது உண்டியல் நகைகள் தன்னிடம் இல்லை என கோவில் நிர்வாகத்திடம் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில் தான் சந்தேகம் எழுந்து ஆய்வு செய்த போது, நகைகள் மாயமானது தெரிய வந்துள்ளது.
குற்றப்பிரிவு போலீசார் முன்னிலையில் நேற்று கோவில் மேலாளர் ராமு, காசாளர் பாண்டி ஆகியோர் ஆஜராகினர். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளனர்.
ஸ்தானிகர் சீனிவாசன் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் ஸ்தானிகர் வாய் திறந்தால் மட்டுமே கோவில் நகைகள் நிலை தெரியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

