/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கொலை செய்யப்பட்ட பெண்: நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம்
/
கொலை செய்யப்பட்ட பெண்: நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 24, 2024 11:55 PM

பரமக்குடி : பரமக்குடியில் இரண்டாவது கணவர் போதையில் மனைவியை கொலை செய்த சம்பவத்தில் உறவினர்கள் உடலை பெற்றுக் கொள்ளாத நிலையில் நிவாரணம் கேட்டு அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரத்தைச் சேர்ந்தவர் மேகலா 25. இவருக்கும் அறந்தாங்கி பரமேஸ்வரனுக்கும் திருமணம் நடந்த நிலையில் 6 மற்றும் 2 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்பத் தகராறில் இருவரும் பிரிந்து வாழும் நிலையில் பரமக்குடி மணிகண்டனை 29, இரண்டாவதாக மேகலா திருமணம் செய்துள்ளார்.
தொடர்ந்து போதையில் அடிக்கடி ஏற்பட்ட தகராறில் இவர்கள் இருவரும் ஆறு மாதங்களாக பிரிந்து வாழ்கின்றனர். மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு பெரிய கடை பஜாரில் உள்ள கடையில் மேகலா பணியில் இருந்த போது போதையில் அங்கு வந்த மணிகண்டன் கத்தியால் குத்தியதில் மேகலா இறந்தார். நேற்று பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்தனர். நேற்று மாலை எமனேஸ்வரம் நேருஜி மைதானத்தில் சவுராஷ்டிரா சபை உள்ளிட்ட அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சவுராஷ்டிரா சமூக நலச் சங்க தலைவர் கங்காதரன் தலைமை வகித்தார்.
இதில் பரமக்குடி, எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபை தலைவர்கள் மாதவன், கோவிந்தன், இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட், அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ., வி.சி.க., காங்., மக்கள் நீதி மய்யம், ஓ.பி.எஸ்., அணி, ஹிந்து முன்னணி உட்பட அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர். அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும். இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவிற்கு வைப்புத் தொகை மற்றும் வீடு வழங்கி அரசு தத்தெடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மேலும் போதை பழக்கம் அதிகரித்து வரும் சூழலில் இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.