/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாண்டியர், சோழர் காலத்தில் வணிகத்தில் சிறந்த தொண்டி மரபு நடை நிகழ்ச்சியில் தகவல்
/
பாண்டியர், சோழர் காலத்தில் வணிகத்தில் சிறந்த தொண்டி மரபு நடை நிகழ்ச்சியில் தகவல்
பாண்டியர், சோழர் காலத்தில் வணிகத்தில் சிறந்த தொண்டி மரபு நடை நிகழ்ச்சியில் தகவல்
பாண்டியர், சோழர் காலத்தில் வணிகத்தில் சிறந்த தொண்டி மரபு நடை நிகழ்ச்சியில் தகவல்
ADDED : செப் 14, 2024 11:14 PM

திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரைப் பகுதிகள் பாண்டியர், சோழர் காலத்தில் வணிகத்தில் செழித்திருந்ததாக மரபு நடை நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை, திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பாரம்பரிய இடங்களை காண இரு நாட்கள் 'நெய்தல் மரபு நடைப் பயணம்' ஏற்பாடு செய்யப்பட்டது.
தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தில் துவங்கிய நிகழ்வில் ஆய்வு நடுவ தலைவர் சுதாகர் தலைமை வகித்தார். செயலாளர் பாலமுருகன் வரவேற்றார். ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் வே.ராஜகுரு பேசியதாவது:
பாண்டிய, சோழ நாடுகளின் எல்லையான பாம்பாற்றங்கரையில் சுந்தரபாண்டியன் பட்டினம், சோழகன்பேட்டையில் சமணம், பவுத்தம், சைவம், வைணவ மதங்கள் செழித்து இருந்துள்ளன. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இவ்வூரைக் கைப்பற்றிய பின், சுத்தவல்லியான சுந்தரபாண்டியபுரம் என மாற்றப்பட்டுள்ளது.
புரம், பேட்டை ஆகியவை வணிக நகரங்களைக் குறிக்கும் சொற்கள்.
இவ்வூரின் தெற்கே இடையமடத்தில் சமண தீர்த்தங்கரர் பார்சுவநாதர் புடைப்புச் சிற்பத்துடன் சமணப்பள்ளி, அருகில் ஒரு பாதக்கோயில் உள்ளன.
இங்கு 4 துண்டு கல்வெட்டுகள் உள்ளன. திருபுவனச் சக்கரவர்த்திகள் விக்கிரமபாண்டியனின் 5ம் ஆட்சியாண்டைச் சேர்ந்த இதில் வெட்டுடையார் உய்யவனதார முதலி என்ற பாண்டிய அரசு அதிகாரி பெயர் உள்ளது.
தீர்த்தாண்ட தானத்தில் 1269ல் தங்கி இருந்த அஞ்சு வண்ணம் எனும் இஸ்லாமியர் தலைமையிலான மணிக்கிராமம், சாமந்தப்பண்டசாலி, தோயாவத்திரச் செட்டிகள், தென்னிலங்கை வளஞ்சியர், கைக்கோளர், துாசுவர், வாணியர், கரையார் ஆகிய வணிகக்குழுவினர் சிவன் கோயில் எதிரே சிதைந்த மண்டபத்தை பழுது பார்க்க ஒப்புக்கொண்டுள்ளனர்.
தொண்டியும், பெரியபட்டினமும் பிற்காலப் பாண்டியர் காலத்தில் நவரத்தின வணிகர்களால் பவித்திர மாணிக்கப்பட்டினம் என அழைக்கப்பட்டுள்ளன. தேவிபட்டினம் சிவன் கோயிலில் நானாதேசி வாசலும், திருஞானசம்பந்தன் வணிகர் தளமும் இருந்துள்ளன.
இயற்கையான உப்பங்கழிகளால் உருவான துறைமுகங்கள், வளமான நெல் விளைச்சல், பெரிய ஆறுகள் குறுக்கிடாமை, இயற்கைத் தடைகள் இல்லாமை, அதிக வணிகப் பாதைகள், பாதுகாப்பு காரணங்களால் 2000 ஆண்டுகளாக வெளிநாட்டு, உள்நாட்டு வணிகர்களும், வணிகக் குழுக்களும் ராமநாதபுரம் பகுதிக்கு வந்துள்ளனர் என்றார்.
ஏற்பாடுகளை சிற்றிங்கூர் ராஜா, பழனிசாமி, ஸ்ரீதர் செய்திருந்தனர்.