/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளி முன்பு நாடகமேடை கல்வி பாதிக்கும் அபாயம்
/
பள்ளி முன்பு நாடகமேடை கல்வி பாதிக்கும் அபாயம்
ADDED : மார் 25, 2024 05:31 AM
முதுகுளத்துார், : முதுகுளத்துார் அருகே காக்கூர் கிராமத்தில் 1936ம் ஆண்டு முதல் டி.இ.எல்.சி., தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இங்கு சில மாதங்களுக்கு முன் பள்ளியின் முன்பு நாடக மேடை கட்டும் பணிக்காக பூமி பூஜை செய்யப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து தாலுகா அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி தாளாளர் பெனையா ஸ்டான்லி கூறுகையில், காக்கூர் கிராமத்தில் டி.இ.எல்.சி., தொடக்கப்பள்ளி முன்பு நாடக மேடை கட்டும் பணி துவங்க உள்ளதாக தகவல் வந்த நிலையில் பணியை நிறுத்த மனு அளிக்கப்பட்டது.
பள்ளியை மறைத்து நாடக மேடை கட்டப்படுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். பள்ளி வளர்ச்சிக்கு இடையூறாகவும் இருக்கும். அதே போல் இப்பள்ளி ஓட்டுச்சாவடி மையமாகவும் செயல்பட்டு வருகிறது.
எனவே பள்ளி முன்பு கட்டப்பட்டு வரும் நாடக மேடை பணியை நிறுத்தி வேறு இடத்தில் அமைக்க அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

