ராமேஸ்வரம் கோயிலில் நீராடும் வழித்தடம் சீரமைப்பு தாமதம்
ராமேஸ்வரம் கோயிலில் நீராடும் வழித்தடம் சீரமைப்பு தாமதம்
ADDED : ஆக 05, 2026 06:24 PM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் புனித நீராடும் வழித்தடம் சீரமைப்பு பணி தாமதம் ஆவதால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராட தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்த வழித்தடத்தில் தீர்த்த நீர் தேங்குவதால் பக்தர்கள் இடறி விழுந்து காயமடைகின்றனர். இதனை தவிர்க்க கோயில் நிர்வாகம் ரூ.6 கோடி செலவில் தீர்த்த வழித்தடம் மற்றும் 3ம் பிரகாரத்தில் கிரானைட் கற்கள் பதிக்கும் பணி இரு மாதம் முன்பு துவங்கியது.
ஆனால் 3ம் பிரகாரத்தில் கற்கள் பதிக்கும் பணி 90 சதவீதம் முடிந்த நிலையில், தீர்த்த வழித்தடத்தில் கற்கள் பதிக்கும் பணி மந்தமாக நடக்கிறது. இதனால் பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளதால் புனித நீராட வரும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். எனவே புனித நீராடும் வழித்தடத்தில் கற்கள் பதிப்பதை துரிதப்படுத்த கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
––
