/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
* நவீன மீன் அங்காடி கட்டியதில் ரூ.93 லட்சம்.. *திறப்பு விழாவுடன் 2 ஆண்டாக பூட்டியுள்ளனர்
/
* நவீன மீன் அங்காடி கட்டியதில் ரூ.93 லட்சம்.. *திறப்பு விழாவுடன் 2 ஆண்டாக பூட்டியுள்ளனர்
* நவீன மீன் அங்காடி கட்டியதில் ரூ.93 லட்சம்.. *திறப்பு விழாவுடன் 2 ஆண்டாக பூட்டியுள்ளனர்
* நவீன மீன் அங்காடி கட்டியதில் ரூ.93 லட்சம்.. *திறப்பு விழாவுடன் 2 ஆண்டாக பூட்டியுள்ளனர்
ADDED : ஜன 15, 2024 04:39 AM

ராமநாதபுரம், : ராமநாதபுரம் உழவர் சந்தை அருகில் ரூ.93 லட்சத்தில் நவீன மீன் அங்காடி மையம் கட்டப்பட்டு 2022ல் அ.தி.மு.க., ஆட்சியில் திறப்பு விழா நடந்து. அதன் பிறகு சில நாட்களில் மூடப்பட்டதால் தற்போது வரை பூட்டிக் கிடப்பதால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, ஏர்வாடி, ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், வாலிநோக்கம், தொண்டி உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து மீன்கள் ராமநாதபுரம் மீன் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வருகிறது. ராமநாதபுரத்தில் சாலைத்தெரு, பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மீன் மார்க்கெட் செயல்படுகிறது.
சாலைத்தெரு மீன் மார்க்கெட்டில் அருகில் காய்கறி மார்க்கெட் செயல்படுவதால் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. வாகனங்களை மார்க்கெட்டிற்கு வெளியை நிறுத்துவதால் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.
இதையடுத்து புதிய பஸ்ஸ்டாண்ட் பின்புறம் உழவர்சந்தை அருகே நவீன முறையில் ரூ.93 லட்சத்தில் புதிய மீன் மார்க்கெட் கட்டப்பட்டுள்ளது. இங்கு 54 கடைகள், வாகன நிறுத்துமிடம், குடிநீர் வசதி, மீன்களை பாதுகாக்க குளிர்சாதன அறை, குறைந்த வாடகை என நவீன முறையில் மீன் மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மீன் மார்க்கெட் 2022ல் அ.தி.மு.க., ஆட்சியில் திறக்கப்பட்டது. இருப்பினும் எதிர்பார்த்த அளவிற்கு வியாபாரிகள் வராததால் ஒப்பந்தாரர் நஷ்டம் ஏற்படுவதாக கூறியதால் கடந்த இரு ஆண்டுகளாக மீன் மார்க்கெட் செயல்படாமல் பூட்டிக் கிடக்கிறது.
தொடர் பராமரிப்பின்றி நவீன மீன்மார்க்கெட் பகுதியில் புதர் மண்டியுள்ளது. ஒப்பந்த காலம் முடிந்த பிறகு தான் மறு ஏலம் விட உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர். எது எப்படியோ ரூ. 93 லட்சத்தில் கட்டிய நவீன மீன் அங்காடியில் குளிர்சாதன அறை, குளிர்சாதனங்கள் பழுதாகி அரசு நிதி வீணாடிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த ஆண்டிலாவது நவீன மீன் மார்க்கெட்டை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். அதற்கு கலெக்டர் விஷ்ணுசந்திரன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.---