/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாணவி பாலியல் பலாத்கார வழக்கு தள்ளிவைப்பு
/
மாணவி பாலியல் பலாத்கார வழக்கு தள்ளிவைப்பு
ADDED : ஆக 17, 2024 12:21 AM
ராமநாதபுரம் : பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் முன்னாள் அ.தி.மு.க., நிர்வாகி உட்பட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கு விசாரணை ஆக.29 க்கு தள்ளி வைக்கப்பட்டது.
பரமக்குடியில் 9-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் ஈடுபட்ட பரமக்குடி நகராட்சி 3--வது வார்டு கவுன்சிலரான அ.தி.மு.க நகர் அவைத்தலைவர் சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், ஜவுளிக்கடை உரிமையாளர் ராஜாமுகமது, புரோக்கர்களாக செயல்பட்ட அன்னலட்சுமி உமா மற்றும் கயல்விழி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டு 5 பேரும் போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டனர். இவர்களில் அ.தி.மு.க. நிர்வாகி சிகாமணிக்கு ராமநாதபுரம் மாவட்ட மகிளா நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி இளங்கோவன் இந்த ஜாமினை ரத்து செய்தார்.
இதை எதிர்த்து சிகாமணியின் மேல் முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் புரோக்கர்களாக செயல்பட்ட அன்னலட்சுமி உமா, கயல்விழி, ராஜா முகமது, புதுமலர் பிரபாகர் ஆகியோருக்கும் உயர் நீதிமன்றம் மதுரை கிளை ஜாமின் வழங்கியுள்ளது.
இந்நிலையில் வழக்கு விசாரணை நேற்று ராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிகாமணி உட்பட 5 பேரும் ஆஜர் ஆகினர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி கோபிநாத் வழக்கை ஆக.29 க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.