/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பனங்கிழங்கு கட்டு ரூ.100 விலை கணிசமாக அதிகரிப்பு
/
பனங்கிழங்கு கட்டு ரூ.100 விலை கணிசமாக அதிகரிப்பு
ADDED : மார் 08, 2025 12:53 AM

ராமநாதபுரம்:பனங்கிழங்கு வரத்து குறைவால் விலை அதிகரித்து, கடந்த மாதம் 70 ரூபாய்க்கு விற்ற கட்டு தற்போது, 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில், உச்சிப்புளி, மண்டபம், தங்கச்சிமடம், திருப்புல்லாணி, சாயல்குடி, அழகன்குளம், பனைக்குளம், ரெகுநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பனங்கிழங்கு சாகுபடி நடக்கிறது.
இரண்டு மாதங்களாக பனங்கிழங்கு வரத்து துவங்கியுள்ளது. தற்போது விலை கணிசமாக உயர்ந்துள்ளது. 25 கிழங்கு கொண்ட கட்டு, 70 ரூபாய்க்கு கடந்த மாதம் விற்றது. தற்போது, 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வேக வைத்த ஏழு பனங்கிழங்குகள், 20 ரூபாய்க்கு விற்கின்றனர்.
வியாபாரிகள் கூறுகையில், '1,000 பனங்கிழங்குகள் கொண்ட மூட்டை கடந்த மாதம், 2,000 ரூபாய்க்கு விற்றது. தற்போது, 2,500 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. விலை உயர்ந்தாலும், இம்மாவட்ட பனங்கிழங்கு பருமனாகவும், தரமாகவும் உள்ளதால், உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மக்களும் அதிகளவில் வாங்குகின்றனர்' என்றனர்.