/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நிலத்தின் மதிப்பு உயர்வால் கிராம மக்கள் அதிருப்தி
/
நிலத்தின் மதிப்பு உயர்வால் கிராம மக்கள் அதிருப்தி
ADDED : பிப் 15, 2025 05:15 AM
கீழக்கரை : ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெருவாரியாக விளைநிலங்களின் (ரியல் எஸ்டேட்) மதிப்பு உயர்த்தப்பட்டதால் அதனை வாங்குவோர் மற்றும் விற்போர் திருப்தி அடைகின்றனர்.
ஏர்வாடி ஊராட்சி சமீபத்தில் ஏர்வாடி பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஏர்வாடி பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் வழிகாட்டி மதிப்பை உயர்த்தி பத்திரப்பதிவு செய்ய பத்திரப் பதிவுத்துறை உயர் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
அதனை கீழக்கரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கடைப்பிடிப்பதால் பொதுமக்கள் பெரும் நெருக்கடியை சந்திக்கின்றனர். ஏர்வாடியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: கீழக்கரை தாலுகாவிற்கு உட்பட்ட 26 வருவாய் கிராமங்களில் சமீபத்தில் ஏர்வாடி ஊராட்சி பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கு மேலும் கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் வகையில் விளைநிலங்களின் வழிகாட்டி மதிப்பு அதிகமாக உயர்ந்துள்ளது. ஏழை, எளிய நடுத்தர பொதுமக்களை பாதிப்படைய செய்கிறது.
அரசு வழிகாட்டுதல் மதிப்பில் முன்பு சதுர அடி ரூ.120க்கு விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது சதுர அடி ரூ.200 கணக்கிட்டு விற்கப்படுகிறது.
எனவே பத்திரப்பதிவுத்துறை உயரதிகாரிகள் இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று அதிகபட்ச நில வழிகாட்டி மதிப்பை பழைய நிலையில் தொடர வேண்டும். அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.