ADDED : ஜூலை 19, 2024 11:49 PM

ராமநாதபுரம் : நேற்று ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பெண்கள் நெய், எலுமிச்சை உள்ளிட்ட தீபங்கள் ஏற்றி வழிபட்டனர்.
ராமநாதபுரம் அல்லிக்கண்மாய் ரோட்டிலுள்ள ராஜ மாரியம்மன், கன்னிகா பரமேஸ்வரி அம்மன, காயக்காரி அம்மன், பட்டணம்காத்தான் சேதுபதிநகர் மல்லம்மாள் காளியம்மன், ஓம்சக்திநகர் ஒத்த பனை மரத்து காளியம்மன், வடக்கு நகர் தேவி கருமாரியம்மன், அண்ணாநகர் சந்தன மாரியம்மன், ராமேஸ்வரம் ரோடு ரயில்வே பாலம் வெட்டுடையாள் காளியம்மன் கோயில் உட்பட பனைக்குளம், பட்டணம்காத்தான் உள்ளிட்ட இடங்களில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜைகள் நடந்தன.
கூழ் காய்ச்சியும், வேப்பிலை, மஞ்சள் பால் அபிேஷகம் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.
*கீழக்கரை தட்டான் தோப்பு தெரு நாராயணசுவாமி கோயிலில் உள்ள பத்திரகாளி அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பெண்கள் நெய் தீபம் ஏற்றினர். பக்தர்களுக்கு கூழ் வார்க்கப்பட்டது.
வண்ணாங்குண்டு அருகே பெரியபட்டினம் அழகு நாயகி அம்மன் கோயிலில் பெண்கள் பொங்கலிட்டனர். பனையோலை பட்டையில் பக்தர்களுக்கு கூழ் வார்க்கப்பட்டது. களிமண்குண்டு காந்தாரி அம்மன் கோயிலில் மூலவருக்கு பூஜைகள் நடந்தது.
*சிவகங்கை தேவஸ்தானம் திருவெற்றியூர் பாகம்பிரியாள் அம்மன், திருவாடானை சிநேகவல்லி அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். --------
* பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நேற்று காலை ஏராளமான பெண்கள் பால் ஊற்றினர். காலை 10:00 மணிக்கு மேல் குடம் குடமாக பாலபிஷேகம் செய்யப்பட்டது. கூழ் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பரமக்குடி சந்தன மாரியம்மன், பத்தினி அம்மன், வராஹி அம்மன், சாத்தாயி அம்மன் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் காலை முதல் பெண்கள் திரளாக தரிசனம் செய்தனர்.
சோமநாதபுரம் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் அபிஷேகங்கள் நடந்தன. நயினார்கோவில் மருதவனம் மாகாளியம்மன் கோயிலில் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பரமக்குடி சின்ன கடை தெரு துர்க்கை அம்மன் கோயிலில் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மாலை அம்மன் பட்டுடுத்தி மலர் அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
ஆர்.எஸ்.மங்கலம்
ஆர்.எஸ்.மங்கலம் கைலாச நாதர் கோயிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மூலவர் மற்றும் நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், தீபாராதனை நடந்தது. பெண்கள் சிவ வழிபாட்டுப் பாடல்களும், அம்மன் துதி பாடல்களும் பாடி வேண்டுதல் நிறைவேற்றினர். தொடர்ந்து நடந்த தீபாராதனையில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஆர்.எஸ்.மங்கலம் அரசாள வந்த அம்மன் கோயிலில் மூலவர் அரசாள வந்த அம்மன், துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.