/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
100 நாள் வேலை திட்ட பணிகள் இன்றி தொழிலாளர்கள் தவிப்பு
/
100 நாள் வேலை திட்ட பணிகள் இன்றி தொழிலாளர்கள் தவிப்பு
100 நாள் வேலை திட்ட பணிகள் இன்றி தொழிலாளர்கள் தவிப்பு
100 நாள் வேலை திட்ட பணிகள் இன்றி தொழிலாளர்கள் தவிப்பு
ADDED : மார் 05, 2024 04:31 AM
திருவாடானை : தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்வதற்காக பணிகளும் ஒதுக்கவில்லை. ஏற்கனவே வேலைபார்த்த பணிகளுக்கு சம்பளமும் வழங்காததால் நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை என்ற உத்தரவாதத்துடன் மத்திய,மாநில அரசுகள் மூலம் இத்திட்டம் செயல்படுகிறது. நாள் ஒன்றுக்கு செய்து முடித்த பணியின் அடிப்படையில் குறைந்தபட்சமாக ரூ.260 சம்பளம் தருகின்றனர்.
குளங்கள், நீர் வரத்துகால்வாய்கள் துார்வாருதல், மரக்கன்றுகள் வளர்ப்பு உட்பட பல்வேறு பணிகள் அந்தந்த ஊராட்சிகள் மூலம் தேர்வு செய்து பணி முடிந்த பின் அரசு மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கான தொகையை மத்திய அரசு 70 சதவீதமும், மாநில அரசு 30 சதவீதமும் பிரித்து வழங்குகிறது.
கடந்த ஐந்து மாதமாக ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை திட்டத்தில் பயனாளிகளுக்கு பணிகள் ஒதுக்கவில்லை. ஏற்கனவே வேலை செய்த பணிகளுக்கும் சில மாதமாக சம்பளம் வழங்கவில்லை.
இதனால் இத் திட்டத்தை நம்பியுள்ள மக்கள் தவிக்கின்றனர்.50 வயதை கடந்த பெண் பயனாளிகள் இத்திட்டத்தில் அதிகளவில் உள்ளனர். இவர்களால் மாற்றுத் தொழிலுக்கும் செல்ல முடியவில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான ஊராட்சிகளில் விவசாயம்,கால்நடை வளர்ப்பு தொழிலை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்துகின்றனர். தற்போது கோடைகாலம் துவங்கியுள்ளதால் விவசாய பணிகளும் குறைந்துள்ளது.
எனவே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மீண்டும் பணிகளை தேர்வு செய்து வழங்க தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கூறியதாவது:
அரசின் பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி அடிப்படையில் பணிகள் தேர்வு செய்யபடவேண்டும். மக்கள் தொகை குறைந்த ஊராட்சிகளில் மட்டும் பணிகள் நடக்கிறது.
வரும் ஏப்ரல், மே மாதத்திற்கு பிறகு மீண்டும்தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மக்களுக்கு பணி வழங்கபடும். நான்கு வார சம்பளம் விரைவில் வழங்கப்படும் என்றனர்.