ADDED : மார் 07, 2025 01:31 AM
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பனில் இருந்து, 90 விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், மன்னார் வளைகுடா ஆழ்கடலில் நேற்று மீன்பிடித்தனர். அங்கு இரு கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் மீனவர்களை விரட்டினர்.
கடலில் விரித்திருந்த வலையை இழுக்க தாமதமானாதால் ஒரு விசைப்படகை மடக்கி பிடித்த இலங்கை வீரர்கள், அதில் இருந்த 14 மீனவர்களையும் கைது செய்து, மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் பாம்பன் மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிப்பது, படகுகளை மீட்பது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்தனர்.
அவர்களுக்கு ஆதரவாக ஐந்து நாட்களாக பாம்பன் மீனவர்களும் வேலை நிறுத்தம் செய்தனர். நேற்று ஐந்து நாட்களுக்கு பின் மீன்பிடிக்க சென்று, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.