ADDED : ஏப் 05, 2025 03:11 AM

திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே பாசிபட்டினம் கடலில் படகு பழுதானதால் கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
தொண்டி அருகே மார்ச் 20 ல் பாசிபட்டினம் கடற்கரையில் இருந்து 2 நாட்டிக்கல் துாரத்தில் படகு ஒன்று நின்றது. அப்பகுதி மீனவர்கள் மரைன் போலீசாருக்கு தெரிவித்தனர். போலீசார் சென்று படகை மீட்டனர். அப்படகில் இலங்கை யாழ்பாணத்தைச் சேர்ந்த பூலோகநாதன் 54, விமலேந்திரன் 45, ஆகியோர் இருந்தனர். இருவரும் மார்ச் 13 ல் யாழ்ப்பாணம் காளியம்மன் கோயிலில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். நீண்ட துாரம் சென்று மீன்பிடித்த போது படகு திசை மாறி பாசிபட்டினத்தை நோக்கி வந்தது. இந்நிலையில் படகு பழுதாகி எரிபொருளும் தீர்ந்து போனது. மீனவர்களின் அலைபேசியும் சுவிட்ச் ஆனது.
அந்த மீனவர்களை மீட்ட தேவிபட்டினம், தொண்டி மரைன் போலீசார் எல்லை தாண்டி வந்ததாக கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இருவரும் போதை பொருள் கடத்துவதற்காக வந்தார்களா என்பது குறித்து கூட்டுக்குழுவினர் விசாரிக்கின்றனர்.
நேற்று முன்தினம் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் பூலோகநாதன், விமலேந்திரன் ஆஜர்படுத்தபட்டனர். இலங்கையில் 11 தமிழக மீனவர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் இலங்கை மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

