/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீனவர்கள் 6 பேர் விடுதலை; இருவருக்கு 6 மாதம் சிறை
/
மீனவர்கள் 6 பேர் விடுதலை; இருவருக்கு 6 மாதம் சிறை
ADDED : ஜன 15, 2025 11:41 PM

ராமேஸ்வரம் : இலங்கை சிறையில் இருந்த மண்டபம் மீனவர்கள் 6 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் இருவருக்கு 6 மாதம் சிறை தண்டனை, ரூ.23.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் இருந்து டிச.8ல் மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் இரு படகையும், அதில் இருந்த 8 மீனவர்களையும் இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். விசாரணை நாளான நேற்று மீனவர்களை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இரு படகின் டிரைவர்கள் யாசின், பத்திரப்பன் ஆகியோருக்கு தலா 6 மாதம் சிறை தண்டனையும், தலா ரூ.11.60 லட்சம் அபராதமும் விதித்தனர்.
அபராதம் கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார். மற்ற 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுவிக்கப்பட்ட 6 மீனவர்களையும் கொழும்பு அருகே மெரிகானா முகாமில் தங்க வைத்தனர். இவர்கள் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் சென்னை வர உள்ளனர்.