/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கன்னிராஜபுரத்தில் தாய், தந்தை நினைவாக பிரம்மாண்ட மணிமண்டபம் திறப்பு விழா இன்று நடக்கிறது
/
கன்னிராஜபுரத்தில் தாய், தந்தை நினைவாக பிரம்மாண்ட மணிமண்டபம் திறப்பு விழா இன்று நடக்கிறது
கன்னிராஜபுரத்தில் தாய், தந்தை நினைவாக பிரம்மாண்ட மணிமண்டபம் திறப்பு விழா இன்று நடக்கிறது
கன்னிராஜபுரத்தில் தாய், தந்தை நினைவாக பிரம்மாண்ட மணிமண்டபம் திறப்பு விழா இன்று நடக்கிறது
ADDED : ஜூலை 05, 2025 11:11 PM
சாயல்குடி: தனது தாய், தந்தையின் நினைவாக கன்னிராஜபுரம் கிராமத்தில் பிரம்மாண்ட நினைவு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று (ஜூலை 6) நடக்கிறது.
சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் ராஜமுத்து, முன்னாள் ஆசிரியை சமுந்திரவள்ளி. ராமநாதபுரம் அருகே சித்தார்கோட்டையில் உள்ள முகமதியா மேல்நிலைப் பள்ளியில் 28 ஆண்டுகளாக உடற்கல்வி ஆசிரியராக ராஜமுத்து பணியாற்றி வந்துள்ளார்.
இவர் அத்தியூத்து, தேர்போகி, புதுவலசை, பனைக்குளம், அழகன்குளம், ஆற்றங்கரை உள்ளிட்ட பகுதி பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி ஏராளமான விளையாட்டு வீரர்களை உருவாக்கியுள்ளார்.
இவர் பயிற்றுவித்த மாணவர்கள் தடகளம் மற்றும் குழு விளையாட்டுகளில் மாவட்ட, மாநில அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இவரது மனைவி சமுந்திரவள்ளி ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் ராஜமுத்துவின் ஐந்தாம் ஆண்டு மற்றும் சமுந்திரவள்ளியின் நான்காம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு இவரது குடும்பத்தினர் சார்பில் அதிக பொருட்செலவில் கண்ணை கவரும் விதமாக மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
கன்னிராஜபுரம் ராமையா நாடார் குடியிருப்பு பகுதியில் உள்ள கே.ஆர். கார்டன் வளாகத்தில் கா.ராஜமுத்து, தாய் சமுந்திரவள்ளி ஆகியோரின் பெயரில் மணிமண்டபம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா இன்று காலை 10:00 மணிக்கு நடக்கிறது.
தங்களை வளர்த்தெடுத்த தாய் தந்தையரின் நினைவை போற்றும் வகையில் அவரது குடும்பத்தினர் பிரம்மாண்ட மாளிகை வடிவில் நினைவு மண்டபத்தை எழுப்பியுள்ளனர்.
உடற்கல்வி ஆசிரியர் ராஜமுத்து அறக்கட்டளை சார்பில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, சென்னை ஆர்த்தி ஸ்கேன் மற்றும் லேப்ஸ் சார்பில் மருத்துவ முகாம் இன்று காலை முதல் மாலை வரை நடக்கிறது.
இதில் இதய நோய் நிபுணர், சிறுநீரக மருத்துவர் ஹோமியோபதி டாக்டர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க உள்ளனர்.
இதனை தொடர்ந்து மாநில அளவிலான ஆண்கள் கபடி போட்டி நடக்கிறது. பல்வேறு வெளி மாவட்டங்கள் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
அங்குள்ள அரங்கில் சைவ, அசைவ உணவுகள் வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ராஜமுத்து ஆசிரியர் அறக்கட்டளை சார்பில் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் செய்து வருகின்றனர்.

