/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆடி அமாவாசையில் கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்
/
ஆடி அமாவாசையில் கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்
ஆடி அமாவாசையில் கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்
ஆடி அமாவாசையில் கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்
ADDED : ஜூலை 24, 2025 11:43 PM

தேவிபட்டினம்: ஆடி அமாவாசையை முன்னிட்டு, தேவிபட்டினம் நவபாஷாணத்தில் நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
முன்னதாக, கடலின் நீராடிய பக்தர்கள், நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபாடு செய்து பின்னர், எள் பிண்டம் கரைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
கூட்டத்தை கட்டுப் படுத்தும் விதமாக, தனித்தனி பாதைகள் தடுப்பு கம்புகள் மூலம் அமைக்கப்பட்டிருந்தது.
நவபாஷாணத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஹிந்து அறநிலையத்துறை சிவகங்கை இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் ஞான சேகரன், செயல் அலுவலர் மாரிமுத்து உள்ளிட்டோர் செய்தனர்.
திருப்புல்லாணி: ஆடி அமாவாசையை முன்னிட்டு சேதுக்கரையில் சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கடற்கரை வளாகப் பகுதியில் புரோகிதர்கள் மூலம் பித்ரு கடன் பூஜைகளை நிறைவேற்றினர். பின்னர் புனித நீராடி ஆஞ்சநேயர் கோயிலில் தேங்காய் உடைத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் அருகே உள்ள வெள்ளை பிள்ளையார், அகத்தியர் கோயிலில் வழிபட்டனர். பசுக்களுக்கு பச்சரிசி, வெல்லம், அகத்திக்கீரை, வாழைப்பழம் உள்ளிட்டவைகளை வழங்கினர். காக்கைகளுக்கு அன்னமிட்டனர்.
திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
சாயல்குடி: மாரியூர் பூவேந்திய நாதர் கோயிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு மூலவருக்கு தொடர் பாலபிஷேகம் நடந்தது.
அருகே உள்ள மாரியூர் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் உள்ளிட்ட பூஜைகளை செய்தனர். கோயிலில் உள்ள முன்னை மரத்தை தொட்டு வணங்கி மோட்ச தீபம் ஏற்றினர். மூக்கையூர் கடலிலும் பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர்.
திருவாடானை: தொண்டி அருகே தீர்த்தாண்டதானத்தில் சகலதீர்த்தமுடையவர் கோயிலில் நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் கடலில் புனித நீராடி, சகலதீர்த்தமுடையவர், சவுந்தரநாயகி அம்மனை தரிசனம் செய்தனர்.

