
பரமக்குடி : பரமக்குடியில் உள்ள கோயில்கள் மற்றும் வைகை ஆற்றில் நேற்று முன்தினம் இரவு ஆடிப்பெருக்கு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பரமக்குடி பதினெட்டாம்படி வேம்படி கருப்பணசாமி கோயிலில் நேற்று முன்தினம் காலை ஹோமங்கள், அபிஷேகம் நடந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு கருப்பண்ணசாமி சந்தன காப்பு ராஜாங்க சேவையில் அருள்பாலித்தார்.
* பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த காக்கா தோப்பு சுந்தரராஜ பெருமாள் கோயில் சன்னதியில் பதினெட்டாம்படி கருப்பணசாமி அருள்பாலிக்கிறார். இங்கு மாலை 6:00 மணி துவங்கி பால்,
சந்தனம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தது.
பின்னர் சந்தனகாப்பில் அருள் பாலித்த கருப்பண்ணசாமி சன்னதி பதினெட்டு படியில் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். பின்னர் பிரசாதங்கள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
*பரமக்குடி வைகை ஆறு சுந்தரராஜ பெருமாள் கோயில் படித்துறையில் நதியை கொண்டாடும் வகையில் ஏராளமான பெண்கள், ஆண்கள் வழிபாடு நடத்தினர்.