/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நெல் கொள்முதல் நிலையத்தில் கூடுதல் கட்டுப்பாடு
/
நெல் கொள்முதல் நிலையத்தில் கூடுதல் கட்டுப்பாடு
ADDED : பிப் 02, 2026 06:31 AM
திருவாடானை: நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதல் ஆவணம் கேட்டு புதிய கட்டுப்பாடுகளால் விவசாயிகள் சிரமம் அடைந்துள்ளதாக அ.தி.மு.க., குற்றம் சாட்டியுள்ளது.
திருவாடானை தாலுகாவில் இந்த ஆண்டு பெய்த மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் தீவிர நெல் சாகுபடியில் ஈடுபட்டனர். தற்போது அறுவடைப் பணிகள் ஆங்காங்கே அதிகரித்த நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் நெய்வயல், சிறுமலைக்கோட்டை, நீர்க்குன்றம், வெள்ளையபுரம் மற்றும் மங்களக்குடி ஆகிய 5 ஊர்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
அரசூர், கற்காத்தகுடி, திருவெற்றியூர் மற்றும் தொண்டி ஆகிய ஊர்களில் இன்னும் சில நாட்களில் கொள்முதல் நிலையங்கள் முழுமையாகச் செயல்படத் துவங்கும் என விலை அறிவிக்கப்பட்டுள்ளது. சன்ன ரகம் கிலோ ரூ. 25.45, பொது ரகம் 25.00 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப் போல எளிய நடைமுறையைப் பின்பற்றாமல் இந்த ஆண்டு கூடுதல் ஆவணங்களைக் கேட்டு விவசாயிகளை அலைக்கழிப்பதாக திருவாடானை (மேற்கு)அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஆசைராமநாதன் கூறினார்.
அவர் கூறியதாவது:
நெய்வயல் கொள்முதல் நிலையத்தில் வழக்கமாக வழங்கப்படும் சிட்டா, அடங்கல் மற்றும் வங்கிப் புத்தக நகல்களுடன் தற்போது நிலத்தின் கிரையப் பத்திரத்தையும் அதிகாரிகள் கேட்கின்றனர். தந்தை மகனுக்கு எழுதி கொடுத்துள்ள உயில் பத்திரம், குத்தகை என்றால் அதற்கான பத்திரம் கேட்கின்றனர். கடந்த ஆண்டுகளில் வி.ஏ.ஓ. அடங்கல் சான்றிதழை அடிப்படையாகக் கொண்டே நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
அந்த எளிய முறையை விடுத்து இந்த ஆண்டு தேவையற்ற ஆவணங்களைக் கேட்பது விவசாயிகளைத் துன்புறுத்தும் செயலாகும். இது தனியார் நெல் வியாபாரிகளுக்கு சாதகமாக உள்ளது. விவசாயிகளின் நலன் கருதி நிபந்தனைகளைத் தளர்த்தி கடந்த ஆண்டு நடைமுறையிலேயே நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்றார்.

