/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
துாய்மைப் பணிக்கு உபகரணமின்றி அவதி
/
துாய்மைப் பணிக்கு உபகரணமின்றி அவதி
ADDED : அக் 18, 2024 05:00 AM
திருவாடானை: கிராமங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் இல்லாததால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் 47 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள துாய்மை இந்தியா திட்டம் செயல்படுகிறது. கிராமங்களில் குடியிருப்புகள் பல மடங்கு அதிகரித்தும், அதற்கேற்ப துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை.
இதனால் வீடுகள் தோறும் சென்று மக்கும், மக்காத குப்பையை பிரித்து சேகரிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. சில குடியிருப்புகளுக்கு வாரத்தில் ஒரு முறை மட்டுமே பணியாளர்கள் செல்ல வேண்டிய நிலை உருவாகிறது. இது தவிர குப்பை சேகரிக்க தேவையான உபகரணங்களும் இல்லை.
ஊராட்சி தலைவர்கள் கூறியதாவது: மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகள் அடிப்படையில் கூடுதலாக பணியாளர்களை நியமிக்க வேண்டும். காலியிடங்களில் கிடக்கும் உடைந்த மது பாட்டில்கள், கண்ணாடித்துகள்களை சேகரிக்கும் போது பணியாளர்கள் காயமடைகின்றனர். சாக்கடைகளை துார்வாரும் போது கையுறை உள்ளிட்ட எவ்வித உபகரணங்களும் இல்லாமல் வெறும் கையில் பணிகளை மேற்கொள்கின்றனர். இதனால் பணியாளர்கள் காயமடைவதுடன், நோய்த்தாக்குதலுக்கும் ஆளாகும் நிலை உள்ளது. குப்பை சேகரிக்க தேவையான உபகரணங்களும் இல்லை. குப்பை வண்டிகள் பழுதாகி விட்டதால் பயன்படுத்த முடியவில்லை.
மற்ற ஊராட்சி ஒன்றியங்களில் குப்பை அள்ள வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் வழங்கப்படவில்லை. மழைக் காலம் துவங்கி விட்டதால் துாய்மைப் பணியாளர்களுக்கு உபகரணங்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.