ஓட்டுச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும்
ஓட்டுச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும்
ADDED : மார் 25, 2026 05:21 PM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் தொகுதி உட்பட்ட கிராமங்களில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் இல்லாததால் முன்கூட்டியே வசதிகளை ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என்று வாக்காளர்கள்,பணியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
முதுகுளத்துார் சட்டசபை தொகுதியில் 2 லட்சத்து 97 ஆயிரத்து 310 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு கடந்த தேர்தலில் 385 ஓட்டுச்சாவடி மையங்கள் இருந்த நிலையில் தற்போது 29 அதிகரித்து 414 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஓட்டுப்பதிவு முந்தைய நாளில் ஓட்டுச்சாவடி மையங்களுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரம், வி.வி.பேட்., இயந்திரங்கள் பணியாளர் கொண்டு வந்து விடுவார்கள்.
ஆனால் முதுகுளத்துார் தொகுதியில் ஏராளமான கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகள், சமுதாயக்கூடம் கட்டடங்களில் குடி தண்ணீர், கழிப்பறை, மின்விளக்கு, சாய்தளம் பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. அது மட்டும் இல்லாமல் வெளியூரில் இருந்து வரும் பணியாளர்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே முதுகுளத்துார் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் தேர்தல் நடப்பதற்கு முன்பாக ஏற்பாடு செய்ய உறுதி செய்ய வேண்டும் என்று வாக்காளர்கள், பணியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
