/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
'தீ விபத்திற்கு பேட்டரிகள் வெடிப்பே காரணம்'
/
'தீ விபத்திற்கு பேட்டரிகள் வெடிப்பே காரணம்'
ADDED : ஜன 02, 2025 11:46 PM

ராமநாதபுரம்,:ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை புதிய கட்டடத்தில் ஐந்து தளங்கள் உள்ளன. இதில், இரண்டாவது தளத்தில் நேற்று முன்தினம் இரவு, 11:15 மணிக்கு, 'இன்வெர்ட்டர்' பேட்டரிகள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. அனைத்து தளங்களிலும் கரும்புகை பரவியதால், நோயாளிகள் கூச்சலிட்டபடி வெளியே ஓடினர். உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு, டார்ச் லைட் வெளிச்சத்தில் நோயாளிகள் பாதுகாப்பாக கீழ்தளத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், எஸ்.பி., சந்தீஷ் மீட்புப் பணிகளை விரைவுபடுத்தினர். நேற்று மருத்துவமனை அனைத்து வார்டுகளிலும் துாய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. பின், நோயாளிகள் வார்டுகளில் மாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இம்மருத்துவமனை திறக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே ஆகிறது. பேட்டரி, ஜெனரேட்டர் அறையில் காற்றோட்டம் இல்லை. இதனால், வெப்பம் அதிகமாகி வெடித்துள்ளன.
டீன் அமுதா ராணி கூறுகையில், ''மின்கசிவு ஏற்பட்ட இடம் அருகே நோயாளிகள் பிரிவு இல்லை. புகையால் உயிர்சேதமோ, மூச்சுத்திணறலோ, வேறு எந்த உபாதைகளோ ஏற்படவில்லை. மேலும், விபத்திற்கும், அவசர சிகிச்சைப் பிரிவு மையத்திற்கும் தொடர்பு இல்லை. அங்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தடையின்றி மருத்துவ சேவை வழங்கப்படுகிறது,'' என்றார்.

