/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சித்திரங்குடி சரணாலயத்தில் பறவைகள் பாவம்; கண்மாய், வாய்க்கால்களை துார்வார கோரிக்கை
/
சித்திரங்குடி சரணாலயத்தில் பறவைகள் பாவம்; கண்மாய், வாய்க்கால்களை துார்வார கோரிக்கை
சித்திரங்குடி சரணாலயத்தில் பறவைகள் பாவம்; கண்மாய், வாய்க்கால்களை துார்வார கோரிக்கை
சித்திரங்குடி சரணாலயத்தில் பறவைகள் பாவம்; கண்மாய், வாய்க்கால்களை துார்வார கோரிக்கை
ADDED : அக் 08, 2025 01:04 AM

முதுகுளத்துார்; முதுகுளத்துார் அருகே சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் கண்மாய் வறண்டு கிடப்பதால் வெளிநாட்டு பறவைகள் வருகை குறைந்தும், வரும் பறவைகள் விவசாய நிலங்களில் உள்ள கருவேல மரங்களில் தங்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே கண்மாய்க்கு நீர்வரத்து வாய்க்கால்களை துார்வார வேண்டும். மழைநீரை சேமித்து பறவைகள் வசிக்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும்.
சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் 40 எக்டேரில் உள்ளது. 1989ம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.
இங்குள்ள கருவேல மரங்களில் பலவகை புலம் பெயர்ந்த பறவைகள் கூட்டை கண்டறிவது குறிப்பிடத்தக்க சிறப்பம்சம். சரணாலயத்திற்கு ஆஸ்திரேலியா, நேபாளம், தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கூழைக்கிடா, கரண்டி மூக்கன், நத்தை கொத்தி நாரை உள்ளிட்ட ஏராளமான பறவைகள் ஆறு மாதங்கள் வரை தங்கி இனப்பெருக்கம் செய்த பின்பு தங்கள் நாடுகளுக்கு திரும்புவது வழக்கம்.
இவற்றுடன் நீர் நாகம், மீன்கொத்தி, ஒற்றை வால் நாரை உள்ளிட்ட உள்நாட்டு பறவைகளும் தங்கி இனப்பெருக்கம் செய் கின்றன.
கடந்த பல ஆண்டு களுக்கு முன்பு பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் பார்வையிட்டு சென்று வந்தனர்.
பின்பு முறையாக பறவைகள் சரணாலயம் பாதுகாக்கப்படாததால் கண்மாய்க்கான நீர்வரத்து கால்வாய் துார்ந்து விட்டதாலும், போதிய மழை பெய்யாததாலும் தண்ணீர் வரத்து தடைப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக கண்மாய் நிரம்பாத நிலை தான் உள்ளது.
இதனால் வெளி நாடுகளில் இருந்து வரும் பறவைகள் எண்ணிக்கையும் குறைய துவங்கியது. சித்திரங்குடி கண்மாயில் மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது.
கண்மாய்க்கு குண்டாறு, பரளையாறு உள்ளிட்ட ஆறுகளில் இருந்து தண்ணீர் வரும் வகையில் பிரதான கால்வாய் வசதிகளும் மணல்மேடாகி மூடியுள்ளது. தண்ணீர் வருவதற்கு வழியே இல்லை.
ஆனால் பறவைகள் வராவிட்டாலும் சரணாலயத்தில் உள்ள பார்வையாளர் அரங்கம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வனத்துறையினர் தொடர்ந்து பராமரிக் கின்றனர்.
சரணாலயத்திற்கு வரும் அரியவகை பறவை இனங்கள் குறித்த படங்கள் அடங்கிய பலகைகளை முதுகுளத்துார் சுற்றியுள்ள ரோட்டோரங்களில் வைக்கப்பட்டுள்ளன.
கடந்த சில ஆண்டுகளாகவே கண்மாயில் தண்ணீர் இல்லாததால் இங்கு வரும் வெளிநாட்டு பறவைகள் அருகில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள கருவேல மரங்களில் தங்கும் நிலை ஏற்படுகிறது.
இதனால் இந்த அரிய வகை பறவைகளின் மதிப்பு குறித்து தெரியாமல் சிலர் அவற்றை வேட்டையாடி வருகின்ற னர்.
அது மட்டும் இல்லாமல் சரணாலயத்திற்கு வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
புகழ்பெற்ற சித்திரங்குடி பறவைகள் சரணாலயத்தை பராமரிக்க வேண்டும் என்று கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு முறையும் வேட்பாளர்கள் கிராமத்திற்கு வந்து சரணாலயம் மேம்படுத்தப்படும் என்று கூறிவிட்டு செல்கின்றனர்.
ஆனால் அதை முறையாக செய்வது கிடையாது. எனவே அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ள சித்திரங்குடி பறவைகள் சரணாலயத்தை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து கண்மாய்க்கு வைகை, குண்டாறு உள்ளிட்ட பிரதான ஆறுகளில் இருந்து நீர்வரத்து கால்வாய்களை சரி செய்தும் சரணாலயத்தில் பறவைகள் வசிக்கும் சூழ்நிலை ஏற்படுத்த வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.