தட்பவெப்ப மாறுபாடு: தனுஷ்கோடி கரைவலையில் மீன்வரத்து குறைவு
தட்பவெப்ப மாறுபாடு: தனுஷ்கோடி கரைவலையில் மீன்வரத்து குறைவு
ADDED : மே 23, 2025 02:04 AM

ராமேஸ்வரம்:கோடை வெயிலில் கடலில் தட்பவெப்ப மாறுபாடு ஏற்பட்டுள்ளதால் தனுஷ்கோடி கடலில் கரைவலையில் சிக்கும் மீன்கள் வரத்து குறைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் கோடை வெயிலுக்கு பாக்ஜலசந்தி கடல், மன்னார் வளைகுடா கடலில் தட்பவெப்பம், நீரோட்டத்தில் மாறுபாடு ஏற்படும். சில வாரங்களாக பாஜலசந்தி கடலில் தனுஷ்கோடி மீனவர்கள் பாரம்பரியமான கரை வலையில் மீன் பிடிக்கின்றனர். இதில் எதிர்பார்த்த மீன்கள் சிக்காமல் சுவரை மீன், வாலை, முரல் மீன், குமுளா மீன்கள் சிக்குகின்றன.
இந்த மீன்களும் அதிகபட்சம் 10 கிலோ வரை மட்டுமே சிக்குவதால் மீனவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். கரையில் நின்றபடி கடலில் வீசி இழுக்கும் இந்த கரை வலை மீன்பிடிப்பில் 15 முதல் 20 மீனவ தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள்.
எதிர்பார்த்த மீன்வரத்து இல்லாமல் ஒரு மீனவருக்கு கூலி ரூ.200 கூட கிடைப்பதில்லை. ஜூனில் தென்மேற்கு பருவக்காற்று துவங்கியதும் எதிர்பார்த்த மீன்வரத்து கிடைக்கும். இதன் பிறகு கூலி அதிகமாக கிடைக்கும் என தனுஷ்கோடி மீனவர்கள் தெரிவித்தனர்.
