/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடற்கரையோர சோதனைச்சாவடிகள் மூடல்
/
கடற்கரையோர சோதனைச்சாவடிகள் மூடல்
ADDED : ஜன 07, 2024 04:12 AM
திருவாடானை; கடற்கரை ஓரங்களில் அமைக்கப்பட்ட சோதனைச்சாவடிகள் மூடப்பட்டிருப்பதால் கடத்தல் சம்பவங்களை தடுப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சில மாதங்களாக தங்கம் கடத்தல் அதிகரித்துள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபட்டு தப்புவோரை எளிதாக பிடிக்கவும், பிற மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்து சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வருவோரை வாகன சோதனையில் பிடிப்பதற்காக கடற்கரை ஓரங்களில் செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டன.
கடலோர காவல் குழும போலீசாரால் தீர்த்தாண்டதானம், வட்டாணம், வீரசங்கலிமடம், மணக்குடி, உப்பூர், தேவிபட்டினம், கோப்பேரிமடம், சாயல்குடி, திருப்புல்லாணி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டன.
இவற்றில் பணியாற்றிய போலீசார் கடந்த ஆண்டு தெலுங்கானாவில் நடந்த சட்டசபை தேர்தல் பணிக்கும், அதனை தொடர்ந்து சென்னை, துாத்துகுடியில் மழை வெள்ள பாதுகாப்புக்கும் மாற்றப்பட்டனர்.
அங்கு பணிகள் முடிந்து பல நாட்களாகியும் மீண்டும் பொறுப்பேற்க உத்தரவு வராததால் ராமநாதபுரத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் செக்போஸ்ட்களில் வாகன சோதனை இல்லாததால் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. தொண்டி மக்கள் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் தங்கம் கடத்தல் அதிகரித்துள்ளது. குறிப்பாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு அடிக்கடி தங்கம் கடத்தப்படுகிறது. கடத்தல்காரர்கள் தொண்டி கிழக்கு கடற்கரை சாலையை பயன்படுத்தி செல்ல வாய்ப்புள்ளது. ஆகவே செக்போஸ்ட்களில் போலீசாரை நியமித்து வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்றனர்.