/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் காங்., கட்சி அலுவலகம் சூறையாடல் எலுமிச்சைப்பழம், பூ மந்திரித்து வைப்பு
/
ராமநாதபுரத்தில் காங்., கட்சி அலுவலகம் சூறையாடல் எலுமிச்சைப்பழம், பூ மந்திரித்து வைப்பு
ராமநாதபுரத்தில் காங்., கட்சி அலுவலகம் சூறையாடல் எலுமிச்சைப்பழம், பூ மந்திரித்து வைப்பு
ராமநாதபுரத்தில் காங்., கட்சி அலுவலகம் சூறையாடல் எலுமிச்சைப்பழம், பூ மந்திரித்து வைப்பு
ADDED : ஆக 27, 2025 02:56 AM

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் தாலுகா காங்., தலைமை அலுவலகத்தில் அதிகாலையில் அடையாளம் தெரியாத நபர்கள் புகுந்து நாற்காலி, பேன் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர். எலுமிச்சைப்பழம், பூ வைத்து மந்திரித்து சென்றுள்ளனர்.
ராமநாதபுரம் புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கட்டடத்தில் ராமநாதபுரம் நகர் தாலுகா காங்., அலுவலகம் ஒரு மாதமாக செயல்பட்டு வருகிறது. நேற்று அதிகாலை 2:00 மணிக்கு கட்சி அலுவலகத்திற்குள் புகுந்த சிலர் அங்கு காவலுக்கு இருந்த வேல்சாமி என்பவரின் அலைபேசியை பறித்துக் கொண்டு மிரட்டினர்.
பின் அலுவலக பெயர் பலகை, இருக்கைகள் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர். எலுமிச்சை பழம், பூ வைத்து மந்திரித்து வைத்தனர். கட்சி அலுவலகத்திற்கு வேறு பூட்டு போட்டனர். காலை 5:00 மணிக்கு வேல்சாமியிடம் அலைபேசியை கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றனர். வேல்சாமி கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
அங்கு வந்த ராமநாதபுரம் மாவட்ட காங்., பொறுப்பு குழு தலைவர் தேவேந்திரன், பொறுப்பாளர் ராஜாராம் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கேணிக்கரை போலீசாருக்கு தெரிவித்தனர்.
போலீசார் உதவியுடன் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சேர்கள், பதாகைகள் சேதப்படுத்தப்பட்டிருந்தன. அலுவலகத்தில் உள்ள கட்சி வரவு செலவு புத்தகம், கொடி கம்பத்தை காணவில்லை.கேணிக்கரை போலீசார் விசாரணை நடத்தினர்.
ராஜாராம் பாண்டியன் கூறியதாவது:
இந்த இடம் 1960ல் சண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதி மன்னர் காங்., கட்சிக்கு கிரையம் செய்து கொடுத்தது. இந்த 16 சென்ட் இடத்தில் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. அதன் பின் காங்., கட்சியில் இருந்து ஜனதா தளம் பிரிந்ததால் அக்கட்சி நிர்வாகிகள் தங்கள் பெயருக்கு மாற்றிவிட்டனர். கட்சியில் நிர்வாகிகள் தொடர்ந்து மாறி வருவதால் அக்கட்டடம் மீட்கப்படாமல் இருந்து வருகிறது.
கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வரை இந்த இடம் ஜனதா தளத்தை சேர்ந்தவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்கள் தான் வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கு வாடகை வசூலித்து வந்தனர்.இதனிடையே நாடு முழுவதும் உள்ள காங்., சொத்துக்களை மீட்கும் முயற்சி தீவிரபடுத்தப்பட்டது. தமிழகத்தில் அழகிரி, தங்கபாலு உள்ளிட்டோர் தலைமையில் அமைக்கப்பட்ட மீட்பு குழுவினர் ஜூலை 28ல் ராமநாதபுரத்தில் உள்ள சொத்தை கையகப்படுத்தி, பெயர் பலகை, கட்சிக் கொடி ஏற்றினர்.
இந்நிலையில் அடையாளம் தெரியாத சிலர் சேதப்படுத்தியுள்ளனர்.அதில் ஹோட்டல் வைக்க போவதாக கூறி சமையல் பாத்திரங்கள் இறக்கி வைத்துள்ளனர். கட்சி அலுவலகத்தின் பேனரை அகற்றிவிட்டு ஜாபர் ஹோட்டல் என பேனர் வைத்துள்ளனர்.
போலீசில் புகார் அளிக்கும் போது ஜனதா கட்சியில் இருந்து யாரும் வரவில்லை. சிவப்பிரகாசம், ஜாபர் என இருவர் வந்து சமரசம் பேசுகின்றனர்என்றார்.இதனிடையே பெரியகருப்பன் நகரை சேர்ந்த சிவப்பிரகாசம் தரப்பில் கேணிக்கரை போலீசில் காங்., கட்சியினர் இடத்தை அத்துமீறி ஆக்கிரமித்துள்ளதாக புகார் அளித்துள்ளார். இரு தரப்பு மனுக்கள் மீதும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

