/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விடுமுறையின்றி ஒப்பந்த பணியாளர்கள் அவதி
/
விடுமுறையின்றி ஒப்பந்த பணியாளர்கள் அவதி
ADDED : பிப் 05, 2026 05:31 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்கள் பற்றாக்குறையால் வார விடுமுறை கூட எடுக்க முடியவில்லை என வேதனை தெரிவித்தனர்.
ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு தற்போது அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. தரம் உயர்த்திய பின் துாய்மைப் பணி முதல் செவிலியர், லேப் டெக்னீஷியன் உள்ளிட்ட பணியிடங்கள் தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள் கொண்டு நிரப்பப்பட்டது.
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து உயர் சிகிச்சைக்கு பெரும்பாலும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு வருகின்றனர்.
இதனால் நாளுக்கு நாள் மக்கள் வருகை அதிகரித்து வருகிறது. ஆனால் போதிய அளவில் பணியாளர்கள் நியமிக்கப்படாததால் தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்களை கொண்டு மருத்துவமனை இயங்கி வருகிறது.
ஒப்பந்தப் பணியாளர்கள் கூறியதாவது:
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஒவ்வொரு ஷிப்ட்டிலும் 150 முதல் 200 பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் போதிய அளவில் ஆட்கள் இல்லாததால் வார விடுமுறை கூட தர மறுக்கின்றனர்.
விடுமுறை கேட்டாலும் ஆட்கள் பற்றாக்குறையாக உள்ளது. விடுமுறை எடுத்தால் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் என்கின்றனர்.
இதனால் மன உளைச்சலில் உள்ளோம். இரவு நேரத்தில் ஒரு செவிலியர் தான் மருந்திடும் பணியில் உள்ளார். அவசர சிகிச்சை பிரிவையும், உள் நோயாளிகள் பிரிவையும் சேர்த்து பார்க்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர் என்றனர்.

