ADDED : ஜூன் 02, 2026 12:18 AM

பரமக்குடி: பரமக்குடி தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகள் மக்களை முட்டுவதால் பாதிக்கப்படுகின்றனர்.
பரமக்குடி நகராட்சி உட்பட தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் நாள் முழுவதும் மாடுகள் சுற்றித் திரிகின்றன. இது குறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. நகராட்சியால் அவ்வப்போது பிடித்து கட்டப்படும் மாடுகளை அதன் உரிமையாளர்கள் அழைத்துச் செல்வதும் கிடையாது. இதனால் அவற்றை பராமரிக்கும் பொறுப்பை ஏற்க முடியாமல் தவிர்த்து விடுகின்றனர்.
நேற்று முன்தினம் காலை கள்ளழகர் தெருவில் நடந்து சென்ற பெண்ணை மாடு முட்டியதில் தொடை பகுதி முற்றிலும் சேதமடைந்தது. பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கூலி வேலை செய்யும் அவர் செய்வதறியாமல் உள்ளார்.
இதேபோல் டூவீலர், ஆட்டோ மீது மாடுகள் மோதும் போது பலருக்கும் காயம் ஏற்படுவதுடன் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. ஆகவே தெருவில் அலையும் மாடுகளை பிடித்து உடனுக்குடன் அவற்றை ஏலம் விடும் முறையை மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாடுகளையும் பிடித்து அதனை பராமரிக்க முன் வருபவர்களிடம் ஒப்படைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
