/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமாயண கால வரலாற்றில் தொடர்புடைய தனுஷ்கோடி: சுற்றுலா மேம்படுத்தப்படுமா
/
ராமாயண கால வரலாற்றில் தொடர்புடைய தனுஷ்கோடி: சுற்றுலா மேம்படுத்தப்படுமா
ராமாயண கால வரலாற்றில் தொடர்புடைய தனுஷ்கோடி: சுற்றுலா மேம்படுத்தப்படுமா
ராமாயண கால வரலாற்றில் தொடர்புடைய தனுஷ்கோடி: சுற்றுலா மேம்படுத்தப்படுமா
ADDED : அக் 31, 2025 12:24 AM

ராமேஸ்வரம்: ராமாயண வரலாற்றை பிரதிபலிக்கும் தனுஷ்கோடியில் சுற்றுலாவை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமாயண வரலாற்றில் இலங்கை மன்னன் ராவணன் சிறைபிடித்த சீதையை மீட்க தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு கடலில் ராமர், லட்சுமணர், வானர சேனைகள் பாலம் அமைத்தனர். பின் இலங்கையில் ராவணனை வதம் செய்து சீதையை மீட்டு தனுஷ்கோடி திரும்பினர். ராமர் எய்த அம்பு விழுந்த இடம் தான் தனுஷ்கோடி (வில், அம்பு) என பெயர் பெற்றது.
இதனால் பல ஆண்டுகளாக தனுஷ்கோடி கடலில் பக்தர்கள் புனித நீராடி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 22 தீர்த்தங்களை நீராடி செல்வது வழக்கம். போக்குவரத்து வசதி இல்லாத அக்காலத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு சிறிய படகில் பக்தர்கள் சென்று வந்தனர்.
ஆன்மிக தலமாக விளங்கிய தனுஷ்கோடிக்கு 1914ல் ஆங்கிலேயர்கள் பாம்பனில் இருந்து ரயில் போக்குவரத்தையும், தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்தையும் துவக்கினர். இதன் பின் வணிக நகரமாக உருவெடுத்த தனுஷ்கோடியில் சர்ச், கோயில், தபால் நிலையம், தங்கும் விடுதி கட்டடங்கள் உருவானது. இதனால் இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்தனர். ஒரு கட்டத்தில் புனித நகர் வணிக நகரமாகவும் மாறியது.
புரட்டிப்போட்ட புயல்
ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின் ரயில், கப்பல் போக்குவரத்து மத்திய அரசின் கீழ் வந்தது. இதனால் தனுஷ்கோடி தமிழகத்திற்கு வருவாய் ஈட்டும் முக்கிய நகரமானது. 1964 டிச., 22 நள்ளிரவு ஏற்பட்ட புயல் தனுஷ்கோடியை புரட்டிப் போட்டது. இங்கிருந்த சர்ச், கோயில்கள், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட அனைத்து கட்டடங்களும் இடிந்து சின்னாபின்னமாயின. அன்று முதல் தனுஷ்கோடிக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, மக்கள் வாழ தகுதியற்ற நகரமாக மத்திய அரசு அறிவித்தது. ஆன்மிகம், வணிக நகரமாக கொடிகட்டி பறந்த தனுஷ்கோடியை ஒருசில மணி நேரத்தில் புயல் புரட்டி போட்டது.
புத்துயிர் கொடுத்தார் பிரதமர் மோடி
நாட்டின் தென்கோடி முனையில் பாதுகாப்பு அரணாக உள்ள தனுஷ்கோடிக்கு பிரதமராக பதவி ஏற்ற மோடி தேசிய நெடுஞ்சாலை அமைத்து 2017ல் திறந்து வைத்தார். அன்று முதல் தினமும் ஏராளமான வாகனத்தில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடிக்கு வருகின்றனர்.
இதனால் 53 ஆண்டுகளுக்கு பின் தனுஷ்கோடிக்கு புத்துயிர் கொடுத்து மீண்டும் ஆன்மிகம், வணிக நகரமாக மாற்றிக் காட்டிய பெருமை பிரதமர் மோடிக்கு உண்டு.
சுற்றுலா மேம்படுத்தப்படுமா
பல நுாறு ஆண்டுகளாக ஆன்மிகம், வணிகம் மற்றும் ராமாயண வரலாற்றில் தொடர்புடைய தனுஷ்கோடியில் ஸ்ரீ ராமரின் பிரம்மாண்ட சிலை, ராமாயண வரலாற்றை மக்களுக்கு நினைவுபடுத்தும் விதமாக இங்கு செயற்கை பாறைகள் அமைத்து அதில் சிற்பங்கள், ஓவியங்கள் அமைக்க வேண்டும்.
இதன் மூலம் இளம் தலைமுறை மனதில் தனுஷ்கோடி ராமாயண வரலாற்றில் தொடர்புடைய நகரமாக பிரதிபலிக்கும். சுற்றுலா மேம்படும். இதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து ராமேஸ்வரம் சமூக ஆர்வலர் எம்.முனியசாமி கூறியதாவது:
தனுஷ்கோடியில் ராமாயண வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் ராமர் சிலைகள், சிற்பங்கள் மற்றும் மன்னார் வளைகுடா கடலில் வாழும் அரிய வகை மீன்களின் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.
சுற்றுலாப் பயணிகளுக்கு குடிநீர், கழிப்பறை, ஓய்வு கூடம் மற்றும் கடற்கரை பூங்கா, கார் பார்க்கிங் உள்ளிட்ட சுற்றுலாவுக்கான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன் மூலம் தனுஷ்கோடி உலக வரைபடத்தில் முக்கிய சுற்றுலா நகரமாகவும், இப்பகுதி மக்களுக்கு வியாபாரம் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கும் நகரமாகவும் உருவாகும் என்றார்.

