ADDED : மார் 19, 2026 05:34 AM

திருவாடானை: அரசு பஸ் டிஜிட்டல் போர்டுகளில் எழுத்துக்கள் முறையாக தெரியாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பெரும்பாலான பஸ்களில் ஊர் பெயர்களை காட்டும் வகையில் டிஜிட்டல் போர்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.
பயணிகளுக்கு இது பயனுள்ளதாக இருந்து வருகிறது. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் பயணிகளை குழப்பும் எழுத்துகளாக மாறி வருகிறது.
மதுரையிலிருந்து திருவாடானை வழியாக தொண்டிக்கு செல்லும் டி.என். 63.என்.2324 செல்லும் அரசு பஸ் பின்புறம் அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் போர்டில் எழுத்துகள் மறைந்திருந்தது. பயணிகள் கூறுகையில், திருவாடானை- தொண்டி வழித்தடத்தில் மட்டுமின்றி பல பஸ்களிலும் இதே நிலைதான் உள்ளது. போக்குவரத்து அலுவலர்கள் உடனடியாக ஆய்வு செய்து பழுதடைந்த டிஜிட்டல் போர்டுகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
