/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டிஜிட்டல் பயணச்சீட்டு: பஸ்களில் விழிப்புணர்வு
/
டிஜிட்டல் பயணச்சீட்டு: பஸ்களில் விழிப்புணர்வு
ADDED : நவ 05, 2025 09:12 PM

ராமநாதபுரம்: பஸ்களில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி பயணச்சீட்டு பெறுவது குறித்து பயணிகளிடையே துண்டு நோட்டீஸ் மூலம் போக்குவரத்து ஊழியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தமிழகம் முழுவதும் அரசு பஸ்களில் டிஜிட்டல் கருவி மூலம் பயணச்சீட்டு வழங்கும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் பஸ்களில் சில்லரை பிரச்னை பெருமளவு குறைந்துள்ளது. இந்நிலையில் காரைக்குடி மண்டலத்திற்கு உட்பட்ட பஸ்களில் டிஜிட்டல் பயணச்சீட்டு பெறுவது குறித்து போக்குவரத்து ஊழியர்கள் துண்டு நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
போக்குவரத்து ஊழியர்கள் கூறியதாவது:
பஸ்களில் டிஜிட்டல் முறையில் பயணச்சீட்டு பெறும் வசதி இருந்தாலும் பெரும்பாலும் அதை பயணிகள் பயன்படுத்துவது இல்லை. இதனை ஊக்குவிக்கும் வகையில் தற்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப் படுகிறது.
அலைபேசியில் உள்ள யு.பி.ஐ., செயலிகள் மூலம் ஸ்கேன் செய்து பயணச்சீட்டு பெறுவதால் டிக்கெட் பெற்றதற்கான சான்று எப்போதும் கையில் இருக்கும். பரிவர்த்தனை துல்லியமாக பதிவாகுவதால் போக்குவரத்து துறையின் வருவாயும் அதிகரிக்கும் என்றனர்.

