/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் மீனவர்கள் எட்டு பேர் கைது
/
ராமேஸ்வரம் மீனவர்கள் எட்டு பேர் கைது
ADDED : ஜன 13, 2025 01:18 AM

ராமேஸ்வரம்,: நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து நேற்றுமுன்தினம் 150 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் இந்திய- இலங்கை எல்லையில் மீன்பிடித்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டினர்.
கைதுக்கு பயந்த மீனவர்கள் கடலில் வீசிய வலையை அவசரமாக படகில் இழுத்து வைத்துக் கொண்டு படகுடன் நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது ராமேஸ்வரம் நகராட்சி தி.மு.க., கவுன்சிலர் முகேஷ்குமார், மரிய ரெட்ரிக்சன் ஆகியோரது படகில் மீனவர்கள் வலையை இழுக்க தாமதம் ஆனதால் இலங்கை வீரர்கள் இரு படகையும் மடக்கிப்பிடித்தனர்.
அவற்றில் இருந்த களஞ்சியம் 47, முனீஸ்வரன் 49, கார்மேகம் 60, கண்ணன் 43, மற்றும் பிரிஸ்மன் 25, பிரியன் 30, மரிய ஜான் ரெமோரோ 29, சவேரியார் அடிமை 48, ஆகிய 8 பேரை கைது செய்து கிளிநொச்சி கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். பின் அவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக வழக்குப்பதிந்து கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வவுனியா சிறையில் அடைத்தனர்.