/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இ-சேவை மையங்களை அதிகரிக்க வலியுறுத்தல்
/
இ-சேவை மையங்களை அதிகரிக்க வலியுறுத்தல்
ADDED : அக் 29, 2025 09:33 AM
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் பொது இ-சேவை மையங்கள் குறைவாக உள்ளதால் ஆதார் அட்டை உட்பட பல்வேறு சேவை தொடர்பான பணிகளில் சிரமம் ஏற்படுகிறது. எனவே கூடுதலாக இ-சேவை மையங்கள் அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
மாநில தகவல் தொழில் நுட்ப துறையின் மின்னாளுமை முகமை வாயிலாக பொது இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்களில் இருந்து மக்கள் தங்களின் வருமானச்சான்று, இருப்பிடச்சான்று, ஜாதிச்சான்று உள்ளிட்ட வருவாய்த்துறை சார்ந்த பல்வேறு ஆவணங்களுக்கு விண்ணப்பித்து பெற்று கொள்கின்றனர். உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம், மின் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரியினங்களை செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவாடானை தாலுகாவில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலே இ-சேவை மையங்கள் உள்ளன. புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது பெயர் மாற்றம், முகவரி மாற்றம், மாற்று புகைப்படம் பதிவேற்றுவது உள்ளிட்ட பணிகளை ஆதார் இ -சேவை மையங்கள் வாயிலாக தான் மேற்கொள்ள வேண்டும். குறைவான எண்ணிக்கையில் இருப்பதால் ஆதார் சார்ந்த பணிகளை மேற்கொள்ள கூட்டம் அலைமோதுகிறது.
சில நேரங்களில் சர்வர் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். இந்த அலைக்கழிப்பால் பெரும்பாலானோர் ஆதார் சார்ந்த பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

