/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அதிகாரிகள் அலட்சியம்; மீனவர்கள் குமுறல்
/
அதிகாரிகள் அலட்சியம்; மீனவர்கள் குமுறல்
ADDED : நவ 30, 2024 02:41 AM
ராமேஸ்வரம்,:இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு கடற்கரையில் நிறுத்தப்பட்டு மூழ்கிய 15 படகுகளுக்கு மீன்வளத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசின் நிவாரணம் கிடைக்கவில்லை என மீனவர்கள் புகார் தெரிவித்தனர்.
ராமேஸ்வரம் முதல் நாகை வரை பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிப்பது வழக்கம். இவர்கள் எதிர்பாராமல் இலங்கை கடல் பகுதிக்குள் செல்லும் போது அந்நாட்டு கடற்படையினர் கைது செய்கின்றனர். 30 முதல் 60 நாட்களுக்கு பின் மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு விடுவிக்கப்படுகின்றனர்.
ஆனால் படகுகள் இலங்கை வசமே உள்ளன. இதில் 2018 முதல் 2023 வரை இலங்கை வசமுள்ள 58 படகுகள் அரசுடமையாக்கப்பட்டதுடன் பல படகுகள் கடலில் மூழ்கி வீணாகின.
இப்படகுகளுக்கு தமிழக அரசு தலா ரூ.6 லட்சம் நிவாரணத்தொகையை அறிவித்தது. அதன்படி 43 படகுகளின் உரிமையாளர்களுக்கு நேற்று அரசு நிவாரணம் வழங்கியது. மீதமுள்ள 15 படகுகளின் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்காமல் அரசு கிடப்பில் போட்டதால் மீனவர்கள் அதிருப்தி அடைந்தனர்.
மீனவர் சங்கத் தலைவர் தேவதாஸ் கூறியதாவது: இரண்டு மாதங்களுக்கு முன் விடுபட்ட 15 படகுகளுக்கு நிவாரணம் பெற்றுத்தர மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பலமுறை படகுகளின் உரிமையாளர்கள் வலியுறுத்தினர். அதிகாரிகள் அலட்சியத்தால் நேற்று நிவாரணம் கிடைக்கவில்லை. இதனால் கடனில் சிக்கி தவிக்கும் உரிமையாளர்களுக்கு நிவாரணம் கிடைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என்றார்.