ADDED : பிப் 14, 2024 01:58 AM
ராமநாதபுரம்,:-ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துாரில் உயிரோடு இருந்தவரை இறந்து விட்டதாக போலி இறப்புச் சான்றிதழ் தயாரித்து ரூ.2.50 கோடி சொத்துக்களை அபகரித்த 4 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்தனர்.
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை கரடிப்பட்டி தென்றல் நகரை சேர்ந்தவர் பேபிகாஞ்சனா 55. இவரது கணவர் இளங்கோவன் பெயரில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துாரில்உள்ள சொத்துக்களை மீட்க முதுகுளத்துார் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வழக்கறிஞர் பொன்னுமணிக்கு பொது அதிகாரம் வழங்கியுள்ளார்.
இளங்கோவனுக்கு சொந்தமான 2.36 ஏக்கர் நிலங்களை போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்ததாக ராமநாதபுரம் எஸ்.பி., யிடம் 2023 டிச.,ல் வழக்கறிஞர் பொன்னுமணி புகார் செய்தார். இதையடுத்து இளங்கோவன் சொத்துக்களை விற்பனை செய்வதற்காக வில்லங்க சான்று கேட்டு முதுகுளத்துார் சார்பதிவாளர் அலுவலகத்தில் பேபிகாஞ்சனா மனு செய்தார்.
அதில், தனக்கு சேர வேண்டிய சொத்துக்களை கணவரது தம்பியான உதயக்குமார் முதுகுளத்துாரை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் முத்துக்குமாருக்கு பொது அதிகாரம் வழங்கி விற்று மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
முத்துக்குமாரும், அவரது அண்ணன் கணேசனும் சேர்ந்து இளங்கோவன் 2001 ஜன.3ல் இறந்து விட்டதாக போலி இறப்பு சான்றிதழ் தயாரித்து 2008ல் முதுகுளத்துாரை சேர்ந்த மோகன்தாஸ் என்பவருக்கு சொத்தின் ஒரு பகுதியை விற்றனர்.
2016ல் தாய் ரமணி பெயரில் இந்த சொத்தின் மற்றொரு பகுதியை முத்துக்குமார் மாற்றினார். அப்போது இந்த சொத்துக்கு ஏற்கனவே பொது அதிகாரம் வழங்கிய உதயகுமாரின் உயிர் வாழ் சான்று தேவைப்பட்டது. இதற்காக 2007 ல் இறந்து போன டாக்டர் முருகேசன் 2016ல் உதயகுமாருக்கு வழங்கியதாக போலியாக உயிர்வாழ் சான்றிதழ் தயாரித்து கொடுத்தனர்.
இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடியில் ஈடுபட்டதாக முத்துக்குமார், கணேசன், ரமணி, உதயகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். 2.36 ஏக்கர் நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.2.50 கோடி.

