பரமக்குடி பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கன மழை: மின்தடையால் மக்கள் அவதி
பரமக்குடி பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கன மழை: மின்தடையால் மக்கள் அவதி
UPDATED : ஜூன் 20, 2026 09:48 PM
ADDED : ஜூன் 20, 2026 09:41 PM

பரமக்குடி: பரமக்குடி பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில் தொடர் மின் தடையால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
பரமக்குடியில் கடந்த சில நாட்களாக காற்றுடன் மழை பெய்கிறது. நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு துவங்கிய மழை ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. அப்போது சூறைக்காற்று வீசிய நிலையில் ஆங்காங்கே இருந்த பிளக்ஸ் போர்டுகள் மின் வயர்களில் உரசின. இதே போல் சிறிய மரங்கள் சாய்ந்ததால் மின்தடை ஏற்பட்டது.
இரவு 8:00 மணிக்கு ஏற்பட்ட மின்தடை அதிகாலை 1:00 மணி வரை நீடித்தது. மின் ஊழியர்கள் மின் இணைப்புகளை சரி செய்த பின் ஒவ்வொரு பகுதியாக மின் சப்ளை வழங்கப்பட்டது. இச்சூழலில் வேந்தோணி கிராமப் பகுதிகளில் நேற்று முன்தினம் மதியம் 2:00 மணிக்கு ஏற்பட்ட மின்தடை நள்ளிரவுக்கு மேல் சரி செய்யப்பட்டது.
இதே போல் பல்வேறு கிராமங்களில் தொடர் மின்தடையால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். ஆகவே தொடர் மின் தடையை சீர் செய்ய மின்வாரிய ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
