ADDED : பிப் 05, 2026 05:33 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வெளியூர் வரத்து அதிகரிப்பால் மண்டபம், தங்கச்சிமடம் மல்லிகை பூக்களின் விலை குறைந்து கிலோ ரூ.800க்கு விற்றது.
ராமேஸ்வரம் செல்லும் வழியில் உள்ள தங்கச்சிமடம், மண்டபம் அதை சுற்றியுள்ள கிராமங்களில் மல்லிகை நாற்றுகள் உற்பத்தி செய்து விற்கும் தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். பிற பகுதி நாற்றுகளை விட தங்கச்சி மடம் மல்லிகை நாற்றுகள் நன்றாக வளர்ந்து வாசம் மிகுதியாக உள்ளதால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்ட, மாநிலங்களுக்கு மல்லிகை நாற்றுகள் விற்பனைக்கு செல்கிறது.
மல்லிகை பூ பங்குனி, சித்திரை சீசன் காலத்தில் கிலோ ரூ.300 வரை விற்கப்படுகிறது. சீசன் இல்லாததால் தைப்பூசத்தன்று (பிப்.,1) கிலோ ரூ.2000 வரை விற்றது. தற்போது மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் இருந்து மல்லிகை வரத்து அதிகரித்துள்ளதால் விலை சரிவடைந்து கிலோ ரூ.800க்கு விற்கப்படுகிறது. அடுத்த வாரம் மகா சிவராத்திரி விழா வருவதால் மீண்டும் மல்லிகை விலை உயர்ந்து விடும் என வியாபாரிகள் கூறினர் .

